Wednesday, January 21, 2015

ஒன் மேன் ஆர்மி'


ஒரு மாலை நேரம்... காற்றும் மழையும் அடித்து ஓய்ந்திருந்தது. மழை விடுவதற்கும், பள்ளிக்கூடம் முடிவதற்கும் சரியாக இருந்தது. 'ஹே...'வென கத்தியபடி அந்த ஆரம்பப் பள்ளியில் இருந்து சிறுவர்கள் சிட்டாகப் பறந்தனர்.
பள்ளிக்கூடத்தில் இருந்து பக்கத்து கிராமத்துக்குப் போகும் வழிநெடுக மாந்தோப்புகள் நிறைந்திருக்கும். சுழற்றி வீசிய சூறாவளி காற்றில் மாந்தோப்பில் மாங்காய் பிஞ்சுகள் சிதறிக்கிடந்தன. செட்டியார் தோப்பிலும் மாங்காய் பிஞ்சுகள் நிறையவே சிதறிக்கிடந்தன.
பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டை நோக்கி ஓடிக்கொண்டிருந்த அந்த சிறுவனுக்கு மாங்காய் பிஞ்சைப் பாத்ததும் மனசு பிரேக் போட்டது. செட்டியார் தோப்பில் இருந்து இரண்டு மாங்காய் பிஞ்சுகளை எடுத்துப் பைக்குள் போட, 'யாருடா அது...' - தடியுடன் நின்றிருந்த காவல்காரன் ஓடி வந்தான்.
சிறுவன் எடுத்தான் ஓட்டம். வீட்டுக்குப் போனதும், அந்த சிறுவன் தான் எடுத்து வந்த மாங்காயை அம்மாவிடம் காட்டி சந்தோஷப்பட்டான். ''ஏதுடா மாங்காய்...?'' - சிறுவனின் அம்மா குரலை உயர்த்திக் கேட்டார்.
''செட்டியார் தோப்புல இருந்து எடுத்துட்டு வந்தேம்மா...
காவக்காரன் தொறத்தினான். என்னைப் பிடிக்கவே முடியலை தெரியுமா?'' - பெருமையோடு சொன்னான்.
''நீ செஞ்சது தப்புடா... இந்த மாங்காய் நமக்கானது இல்ல... எங்கே எடுத்தியோ அங்கேயே போய் கொடுத்துட்டு வா... அடுத்தவங்களுக்கு சொந்தமான பொருளை நாம கேட்காம எடுக்குறது தப்பு. கேட்டே வாங்கினாலும் அது தப்புதான்! புரிஞ்சுதா'' - என்று அந்த அம்மா சொல்ல...
புரிந்தவனாகத் தலையாட்டிவிட்டு செட்டியார் தோப்புக்குப் போனான் அந்த சிறுவன். எடுத்த மாங்காயை காவல்காரனிடம் திருப்பிக்கொடுத்தான். ''போய் சாப்பிடு தம்பி...'' என்று காவல்காரன் எவ்வளவோ சொல்லியும் மாங்காயை திருப்பிக் கொடுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தான் அந்த சிறுவன்.
இது நடந்தது அந்த சிறுவன் நான்காம் வகுப்புப் படிக்கும்போது!
இப்போது அந்த சிறுவன் நாற்பது வயதைக் கடந்து விட்டார். அம்மா சொல்லிக்கொடுத்தப் பாடம் இன்னும் அவர் நெஞ்சில் இருந்து அகலவில்லை.
அந்த சிறுவன் வேறு யாருமல்ல...
இன்று நேர்மைக்கு இன்னொரு பெயராக ஊரெங்கும் உச்சரிக்கப்படும் திரு. சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள் தான்!
நம் எண்ணங்கள் குழு அவருக்கு வாழ்த்து சொல்லிக்கொண்டு என்றும் ஒத்துழைப்பு நல்குகிறது.

No comments:

Post a Comment