Thursday, February 12, 2015

சன் தொலைக்காட்சி அலுவலகம்


சன் தொலைக்காட்சி அலுவலகம் செல்லும் போதெல்லாம் அங்கு எதிர் புறத்தில் உள்ள ஒரு ஆட்டோ ஸ்டாண்டில் ஒரு ஆட்டோ ,போவோர் வருவோர் கவனத்தை ஈர்க்கும்.!
மக்கள் தோழன் என்று எழுதப்பட்டு இருக்கும் அந்த ஆட்டோவின் பின்புறத்தில் கரும்பலகை ஒன்று மாட்டப்பட்டு இருக்கும்! அழகான கையெழுத்தில் மக்கள் நலனில் மாநகரச் செய்தி துளிகள் என்ற தலைப்பில் தினமும் ஒரு செய்தி எழுதப்பட்டு இருக்கும்.!

பொதுவாக சென்னை போன்ற மாநகரங்களில் இது போல ஆட்டோக்களில் ரியல் எஸ்டேட், துணிக்கடை, நகைக்கடை போன்ற கடைகளின் விளம்பர போர்டுகள் மாட்டப்பட்டு இருக்கும்.. அதற்கு மாத வாடகையும் கிடைக்கும்.

அந்த வருமானத்தை எல்லாம் பாராமல் விழிப்புணர்வோடு மக்களுக்குப் பயனுள்ள நல்ல செய்திகளை எழுதி ,அதைப் பலர் பார்வையில் படச்செய்து வரும் இந்த முயற்சியும் சமூக அக்கறை மிகுந்த செயல் தானே.!

அந்த ஆட்டோ ஓட்டுனரை கூப்பிட்டு விசாரித்தேன்.. இதை நாள் தவறாமல் 10 வருடங்களாகச் செய்து வருகிறார்.. மழைக்காலத்தில் மட்டும் அவர் சாக்பீசில் எழுதுவது அழிந்துவிடும் இருந்தாலும் அழியும் வரை இருக்கட்டும் என்று எழுதிவிடுவாராம்..!

நியாயமான கட்டணம் வாங்குகிறார்.. இதுவரை 2 முறை பயணத்தில் தவறவிட்ட உடைமைகளை உரியவரிடம் சேர்த்து காவல்துறையின் பாராட்டினைப் பெற்றுள்ளார்.. சென்னைக்கு புதியவர்களாக வரும் பலர் இவரது ஆட்டோவில் ஏறி இவரிடம் பழகி..

அடுத்த முறை வரும் போது தொலைபேசியில் முன்கூட்டியே இவரை அழைத்து தங்கள் பணிகளுக்கான பயணத்தை இவரிடமே தொடர்வார்களாம். இது தான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு குடியேறிய நான் சம்பாதித்த சொத்து என்கிறார்...

சொந்த ஊர் எதுண்ணே ..? மதுரைங்க தம்பி..
அட.. !!!! அண்ணன் பேரு? விவேகானந்தன் தம்பி...
ஆஹா....
உண்மையில் நீங்களும் ஞானிதான்ணே..!!!
இந்த நல்ல மனிதரை நீங்களும் பாராட்டலாமே...!

No comments:

Post a Comment