Thursday, December 5, 2019

அகத்தியர்...

மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்ததாக கருதப்படும் அகத்தியரின் பிறந்த தினம் சித்த மருத்துவ தினமாக (டிச.,26) கொண்டாடப்படுகிறது

அகத்தியம் என்பது ஒரு மரபு. அந்த மரபின் முதல் சித்தர் அகத்தியர். உடல் கூறுகள், உடல் செயலியல், அறுவை சிகிச்சை, மன நோய்கள், மந்திரம், தந்திரம், வைத்தியம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம் என அகத்தியர் தொடாத விஷயங்களே இல்லை

இந்திரனின் சாபத்தால் தீ என்ற பூதமானது, கும்பத்தில் கிடந்து, பூமியில் விழுந்து, வாயுவின் துணையால் அகத்தியராக உருவெடுத்தது என்பது புராணக்கதை. எனவே அகத்தியரை கும்பமுனி என்றும் குறிப்பிடுவர். 12 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அகத்தியர் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. சிவனின் கட்டளைப்படி தென்னாட்டிற்கு சென்று வைத்திய வாத யோக ஞான சாத்திரங்களை கற்றுக்கொடுத்து பல்வேறு தமிழ் நுால்களை இயற்றினார்.புராணங்களில் இவ்வாறு கூறப்பட்டு இருந்தபோதிலும் அகத்தியர் என்ற மரபில் அகத்தியர் என்ற பெயர் கொண்ட பல்வேறு சித்தர்கள் இருந்ததாக வரலாறு கருதுகிறது

பொதிகைமலை அகத்தியர், வாதாபி அகத்தியர், லோபமுத்திரை அகத்தியர், புரோகித அகத்தியர், பாபநாச அகத்தியர், புலவர் அகத்தியர் என்ற பெயரில் சித்தர்கள் இருப்பதாக தெரிய வருகிறது. தட்சிணாமூர்த்தி என்ற சித்தரும், அகத்தியரும் ஒன்று எனவும் கருதப்படுகிறது. பல்வேறு அகத்திய நுால்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அகத்தியர் பெயரில் நுால்களாக தொகுக்கப்பட்டுள்ளன. சமஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் வல்லவராக அகத்தியர் திகழ்ந்ததால் அவர் பெயரில் ஆயுர்வேதம் மற்றும் தமிழ் மருத்துவ நுால்கள் ஏராளமாக காணப்படுகின்றன

வேதத்தில் வல்லவரான அகத்தியர் தமிழ் கற்றுத்தேர்ந்து தமிழ் மருத்துவத்தை முதல் நிலைப்படுத்தி பல சிகிச்சை முறைகளை ஏற்படுத்தி சித்த மருத்துவத்தை தோற்றுவித்தார் என்பதால் சித்த மருத்துவத்தின் முதல் சித்தர் அகத்தியராக வணங்கப்படுகிறார்.திருவனந்தபுரத்தில் அனந்தசயனம் என்ற ஊரில் அகத்தியர் சமாதி அடைந்ததாக கூறப்பட்டாலும் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோயிலிலும் இவர் சமாதி இருப்பதாக வரலாறு குறிப்பிடுகிறது. சித்த மருத்துவ வரலாறு எழுதிய கந்தசாமி பிள்ளை, தனது நுாலில் வடநாட்டிலிருந்து அகத்தியர் தென்னாடு வந்த காரணம் வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.

கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளிலும் அகத்தியரை பற்றிய குறிப்புகள் வியூப்பூட்டுகின்றன. அகம் என்றால் ஒளி, தமிழ் மொழிக்கு ஒளியாகிய வெளிச்சத்தை ஏற்படுத்தி தந்ததால் அகத்தில் தீயை கொண்டு அதன் மூலம் இந்த பிரபஞ்சத்திற்கு நல்வாழ்வு நெறிகளை போதித்ததால் அகத்தியர் என்றும் அழைக்கப்படுகிறார்.கஷ்டம் என்றால் பாவம். அகஸ்தம் என்றால் பாவத்தை நீக்குதல். கர்ம வினையினால் நாம் செய்த பாவங்களை நீக்குவதால் அகஸ்தியர் என்றும், எந்தவிதமான நஞ்சானாலும், அதை நீக்கி வெளியேற்றும் தன்மையுடைய அகத்தி மரத்துக்கு ஒப்பானதால் அகத்தியர் என்றும் அழைக்கப்படுகிறார்

அகத்தை அடக்கியவர், அகத்தீயை அடக்கியவர், அகத்தில் அழுக்கில்லாதவர், கும்பத்திலிருந்து வந்தவர், வாதாபியை தோற்கடித்தவர், என அகத்தியரை பற்றி வேதங்களும், புராணங்களும், இலக்கியங்களும், தமிழ் நுால்களும் குறிப்பிடுகின்றன.ரிக் வேத காலத்திலேயே அகத்தியரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சப்த ரிஷிகளில் ஒருவராகவும், அஷ்ட ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் வணங்கப்படுகிறார். ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளிலும் கூட அகத்தியரை பற்றி பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. அகத்தியர் தமிழ் இலக்கணம் வகுத்தவர்.சமுத்திர நீரை குடித்து தேவர்களை காத்த பெருமை அகத்தியருக்கு உண்டு. கைலாய மலை, மேருமலை, சிவன் வழிபாட்டு தலமாக உள்ள வடக்கே சிவனை காண அலைகடலென மக்கள் கூடியதால் தென்பகுதியை காக்க அகத்தியர் வந்தரென்றும் வரலாறு குறிப்பிடுகிறது.சிவனின் கட்டளைப்படி பொதிகை மலைக்கு வந்ததாக திருமூலர் திருமந்திரத்தில் அகத்தியரை பற்றிய பாடலை குறிப்பிடுகிறார்.

ராமாயணத்தில் குள்ளமாக, தடிமனான, உருவமுடைய அகத்தியர் தெற்கே வசித்ததாக குறிப்புகள் காணப்படுகின்றன. தென்னிந்தியா மட்டுமன்றி, தென் ஆசியா, தென் கிழக்கு ஆசியா, ஜாவா, இந்தோனேஷியா மற்றும் இந்திய ஐரோப்பிய நாடுகளில் அகத்தியரை பற்றியபல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. அகத்தியர் ஒரு தெய்வ பிறவியாக கருதப்படுகிறார். கடவுளின் வரமாக மண் கலசத்தில் உயிரணுவாக விழுந்து, அங்கேயே வளர்ந்து வசிஷ்டர், அகத்தியர் ஆகிய இரட்டை குழந்தைகளில் ஒருவராக பிறவி எடுத்ததாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.காடுகளில் வளர்ந்து அங்கேயே இருந்ததால் தமது மனைவி லோபமுத்திரைக்கு அகத்தியர் உபதேசம் செய்த வேதம், இன பேத மறுப்பு, குடும்ப வாழ்க்கை, விடுதலை, உலகப்பற்று, பொருட்பற்று, புதல்வர் பற்று, இயற்கை, இன்பம்,துன்பம், வாழ்க்கை, பிறவி, இறைவனடி சேர்தல், மருத்துவம், மந்திரம், மணி என அகத்தியர் கூறிய பல்வேறு கருத்துகளும் லோபமுத்திராவின் வாயிலாக பல இடங்களில் பரப்பப்பட்டதாக சித்தர் வரலாறு குறிப்பிடுகிறது.

தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் அகத்தியரை பற்றிய குறிப்புகளும், கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.மதுரையில் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை அகத்தியருக்கு உண்டு என தமிழ் வரலாறு குறிப்பிடுகிறது. தமிழ் மொழியின் தந்தை, தமிழ் இலக்கணத்தின் தந்தை என வழங்கப்படும் அகத்தியரை பற்றி சங்க இலக்கியங்கள் புறநானுாறு ஆகியவற்றில் பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன. இந்து சமயத்தின் சைவ சமயத்தின் முதல் சித்தராகவும் அகத்தியர் வணங்கப்படுகிறார்.ஆயுளை வளர்க்கும் மருத்துவம் ஆயுள் வேதியர்களால் பின்பற்றி வந்த காலத்தில் வேதத்தில் உள்ள கருத்துக்களை சித்தத்தின் மூலம் தெளிவு பெற்று தனக்கென தனிப்பாதையை ஏற்படுத்தியவர்கள் தான் சித்தர்கள். அந்த சித்தர்களில் முதன்மையானவர் அகத்தியர்

அகத்தியர் கூறிய பல்வேறு வாழ்வியல் நெறிகளே இன்று சித்த மருத்துவமாக உருவெடுத்து நிற்கிறது.ஒவ்வொரு சித்தரும் தங்கள் அனுபவங்களையும் மருந்து செய்முறைகளையும் தொகுக்க வேண்டும் என அகத்தியர் வழிகாட்டியுள்ளார். அதன் படியே பல்வேறு சித்தர்களும் ஓலை சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் தங்கள் அனுபவ கருத்துக்களையும், மெய்ஞானத்தால் பெற்ற மருத்துவ அறிவையும் தொகுத்து வைத்தனர். அவை சித்தர் நுால்களாக இன்றும் வணங்கப் பெறுகின்றன. நாம் இழந்து விட்ட ஆரோக்கியத்தை மீட்டெடுக்க சித்தர்கள் கூறிய நன்னெறிகளை பின்பற்றி எண்ணெய் முழுக்கு, அறுசுவை உணவு, யோக வாழ்க்கை, விரதமிருத்தல் என நோய் அணுகா விதிமுறைகளை கடைப்பிடித்து ஆரோக்கியமாக வாழ்வோம்.

No comments:

Post a Comment