ஆகாயராஜன்” என்கிற கற்பமூலிகை மற்ற பெயர் முடவாட்டு கிழங்கு(அ) ஆட்டுக்கால் கிழங்கு கடல் மட்டத்தில் இருந்து 3800 அடிக்கு மேல் உள்ள மலைமருந்தியால் பாறைகளில் விளையும் இவற்றிற்கு வேர்கள் கிடையாது பாறைகளில் உள்ள உலோக சத்துக்களலான செம்பு தங்கம் இரும்பு கால்சியம் குறிப்பாக பாறைகளில் உள்ள சிலிகாவை உறிஞ்சும் தன்னை இந்த முடவாட்டு கால் கிழங்கிற்கு உண்டு சிலிகா அயனி கற்பமருந்து என்பதை நாம் அறிவோம் இன்னும் பிற முக்கிய உலோக உப்புகளை உறிஞ்சி தன்னகத்தே கொண்டுள்ளது இவற்றில் இருந்து தங்கத்தை(அயனியை)பிரிக்க இயலும்…….
Showing posts with label Sundarji. Show all posts
Showing posts with label Sundarji. Show all posts
Thursday, August 19, 2021
ஆகாயராஜன்” என்கிற கற்பமூலிகை
Friday, January 8, 2021
நோய்கள் #அண்டாமல் #இருக்க #வேண்டுமா#தேரையர் #சித்தர் #கூறும் #ரகசியம்
#நோய்கள் #அண்டாமல் #இருக்க #வேண்டுமா#தேரையர் #சித்தர் #கூறும் #ரகசியம்.
#சுந்தா்
பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1502
திண்ண மிரண்டுள்ளே சிக்க அடக்காமல்
பெண்ணின் பால் ஒன்றை பெருக்காமல்
உண்ணுங்கால் நீர் கருக்கி மோர் பெருக்கி
நெய்யுறுக்கி உண்பவர்தம் பேருரைக்கிற் போமே பிணி
பொருள்:
மலசலம் ஒழுங்காக போக்கி, விந்துவை அதிகம் விடாமல் தேக்கி, நீரைக் காய்ச்சி, மோரைப் பெருக்கி, நெய்யை உருக்கி உண்டால் அவர்களை எந்த நோயும் அணுகாது
பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1503
பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம்
பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த
ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம்
இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்
மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம்
முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம்
ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே.
பொருள்:
பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்;
பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1504
உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம்
உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம்
பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம்
பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்
மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம்
வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம்
நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே.
பொருள்:
ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம். இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம். மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம். பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம். கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம். பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம். நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்.
பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1505
ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம்
அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந்
தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந்
திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்
வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம்
விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம்
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம்
நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே
பொருள்:
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம், ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய நோய் வராமல் தடுப்போம், வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம், மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம், நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம். இவற்றை எல்லாம் நாம் கடை பிடித்தால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.
பதார்த்த குண சிந்தாமணி பாடல் 1506
பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட்
படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ்
சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந்
துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை
வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம்
வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம்
நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம்
நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே
பொருள்:
பெருக்கும் துடைப்பத்தால் எழும் புழுதி உடல் மேல் படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம். இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம். பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம். உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், ஆளுக்கு துணி இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம். பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம். நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம். இவற்றை எல்லாம் நாம் கடை பிடித்தால் எந்த நோயும் நம்மை அணுகாது, எனவே நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு எந்த அவசியமம் இருக்காது என்கிறார் தேரையர் சித்தர்!
Wednesday, December 30, 2020
பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்
பசுவுக்கு நாம் அகத்திக் கீரை தருவதால் , முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். கொலை , களவு செய்வதால் உண்டாகும் பிரம்ம ஹத்தி தோஷங்கள் விலகிவிடும். நீண்ட நாட்களாக திதி , கர்மா செய்யாமல் இருந்தால் அந்த பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். பித்ரு தோஷங்கள் இருந்தால் நீங்கும்.

Monday, December 21, 2020
மனித ஆயுளை அறுக்கும் ஆறு வாள்கள்!
#மனித #ஆயுளை #அறுக்கும் ஆறு வாள்கள்!
*ஒரு முறை திருதராஷ்டிரன், தன் சகோதரர் விதுரரிடம், ‘‘மனிதனுக்கு ஆயுள் நூறு வருடம் என்பர். எனினும் இதுவரை நூறு வருடங்களைக் கடந்த மனிதர்கள் எவரும் இல்லை என்றே தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்ன?’’ என்று கேட்டார்.*
*விதுரர் பதில் சொன்னார்: ‘‘அரசே மனித ஆயுளை அறுக்கும் #வாள்கள் ஆறு.*
*முதலாவது கர்வம். மனிதர்களில் பலர், ‘இந்த உலகில் நானே கெட்டிக்காரன். மற்றவரெல்லாம் முட்டாள்!’ என்று நினைக்கிறார்கள். ஒருவனுக்கு கர்வம் ஏற்பட்டால் கடவுள் சும்மா இருக்க மாட்டார். ஆகவே, கர்வம் இல்லாமல் இருக்க, தனது குற்றம் குறைகளைப் பார்க்க வேண்டும். பிறரிடம் நற்குணங்களையே பார்க்க வேண்டும்*.
*இரண்டாவது வாள்- அதிகம் பேசுவது. தனக்குப் பேச விஷயங்கள் இல்லாதபோதும், வீண் பேச்சு பேசுபவன், வீண் வம்பை விலைக்கு வாங்குகிறான்.*
*மூன்றாவது வாள்- தியாக உணர்வு இன்மை. அதீத ஆசையே மனிதனின் தியாக உணர்வைத் தடுக்கிறது. இதை உணர்ந்தால், தியாக உணர்வு தானே வரும்.*
*நான்காவது வாள்- கோபம். கோபத்தை வெல்பவனே உண்மையான யோகி. கோபம் வந்து விட்டால், தர்மம் எது? அதர்மம் எது என்பது தெரியாமல் போகிறது. விவேகம் இழந்து பாவங்களைச் செய்ய நேரிடுகிறது.*
*ஐந்தாவது வாள்- சுயநலம். சுயநலமே எல்லா தீமைகளுக்கும் காரணம். சுயநலம் கொண்டவன் தனது காரியத்துக்காக பாவம் செய்யத் தயங்குவதில்லை.*
*ஆறாவது வாள்- துரோகம். இந்த உலகில் நல்ல நண்பர்கள் கிடைப்பதே அரிது. அப்படிப் பட்டவர்களுக்குத் துரோகம் செய்வது தவறு.*
*இந்த ஆறு விஷயங்களிலிருந்தும் ஒருவன் விலகி வாழ்ந்தால் நிச்சயமாக அவன் நூற்றாண்டை நிறைவு செய்வான்.’’
#Sundarji
Sunday, December 6, 2020
Tamilan
குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது.
பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது.
புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது.
பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது.
முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும்.
பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள்.
பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.
அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள்.
மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள்.
அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும்.
நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத்தில் மௌனம் குடிகொள்ளும். உங்கள் ஆன்மா எப்போதும் அமைதியாக இருக்கும்.
விவசாயத்திற்கு முன்னுரிமை
கொடுங்கள் . நாடு நாசமாகாது .
#Sundarji
Monday, August 31, 2020
பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.?
தெரிந்து கொள்ளுங்கள் பழந்தமிழரின் ஆட்டுக்கல் மழைமானி என்றால் என்ன.?
#Sundarji
ஆட்டுக்கல் என்பது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.
மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு அணியமாவார்கள்.
மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.
“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.
” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது
” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..
இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:
மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.
அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.
4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.
மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மாறாநீர் என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.
(குறள் 701)
இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்
பழ.கோமதிநாயகம். நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
(குறள் 452)
எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.
ஒரு உழவு மழை :
‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’
நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....
பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.
அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..
அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..
இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.
அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.
இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது உற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெறுக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...
நதிகளை காப்பாற்ற பனைமரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்...
மனிதனுக்கு இந்த உலகில் விலை மதிப்பற்ற செல்வம் அறிவு..!
பலமான ஆயுதம் பொறுமை..!
மிகச்சிறந்த பாதுகாப்பு உண்மை..!
அற்புதமான மருந்து புன்னகை..!
சிந்தித்து செயலாற்றுங்கள்.
Friday, June 26, 2020
நாகரீகவளர்ச்சி ஆரோக்கியமானதா?
நாகரீகவளர்ச்சி ஆரோக்கியமானதா???
💥#அரிசி_சோறு சாப்பிட்டா #சர்க்கரை ஏறும்னு சொல்லி சப்பாத்தி சாப்பிட சொன்னாங்க.😳
💥அப்புறம் அரிசியும் கோதுமையும் ஒண்ணுதான் , பழம் காய்கறி நிறைய சாப்பிடுங்க ன்னு சொன்னாங்க.
சரின்னு காய்கறி சாப்பிட ஆரம்பிச்சா #பூச்சி_மருந்து தெளிக்கறாங்க #ஆர்கானிக் காய் சாப்பிடுங்கன்னு கூவினாங்க.😳
💥போய் பாத்தா ஆனை விலை ,குதிரை விலை.இருந்தாலும் ஆரோக்கியம் பெரிசுன்னு கேட்ட காச கொடுத்தோம்.😳
💥இப்ப என்னன்னா ஆர்கானிக் எல்லாம் டுபாக்கூர் ,வாடின, வதங்கிய காய் தான் #ஓர்கானிக்ன்னு ஏமாத்துறாங்கன்னு துப்பு சொல்றாங்க.😡
💥#உப்பையும்_சாம்பலையும் #வேப்பங்குச்சியையும் வச்சு பல் விளக்கினோம். 😏
💥இல்ல இல்ல அப்படி பல் விளக்கினா எனாமல் தேஞ்சி போயிடும் பல் கூச்சம் வரும்.அதனால #பேஸ்ட் தான் நல்லதுனு சொன்னாங்க. 😨
💥அதையும் நம்பி பேஸ்ட் யூஸ் பண்ணுனா அவங்க சொன்ன எல்லாமே இப்ப வந்துடுச்சி....!!
கேட்டா உங்க பேஸ்ட்டுல உப்பு இருக்கா? கரி இருக்கா? வேம்பு மற்றும் இலவங்க எண்ணெயின் ஆற்றல் இருக்கானு கேக்குறான்.😡
💥ஏனுங்க பல் கூச்சம் வர வைக்கிறதும் நீங்க தான். அதுக்கு பேஸ்ட் விக்கிறதும் நீங்கதான?😡
💥அதைவிட கொடுமை ஒண்ணு இருக்கு...
#நாட்டு_சக்கரையை/வெல்லத்தை/#கருப்பட்டியை விட #சீனி(அஸ்கா) தான் சுத்தமானது சுவையானதுனு சொன்னீங்க... 😳
💥இப்ப அதுல ஊர்ல இருக்குற எல்லா கெமிக்கலும் இருக்கு. இப்ப அந்த சீனி மாதிரி விஷம் எதுவும் இல்லைனு சொல்லுறீங்க. 😡
💥என்னடா இது அக்கப்போருன்னு வெறும் #பச்ச_தண்ணி குடிக்கலாம்னா , அது ஆபத்து ..R .O டெக்னாலஜி ல சுத்தம் பண்ணின தண்ணி குடிங்கன்னு சொன்னாங்க. ஒரு மெசினை வாங்கி மாட்டினோம் உடனே அதல சத்து இல்ல , எலும்பெல்லாம் உடைஞ்சு போகும்னு இன்னொரு குரூப் பயம் காட்டுது. 😳
💥மறுபடியும் பச்ச தண்ணிய அப்படியே குடிக்க சொல்றீங்க.😏
💥மனசு நொந்து போய் உட்காந்தா வந்தது இன்னொரு குரூப் வந்து
மாடில தோட்டம் போட்டு நாட்டு காய்கறி விதைகளை போடு, பொடக்காலியில செடி நடு, ஆபிஸ்(ஹைபிரிட்) விதைகள் வேண்டாம், மரபு மாற்றப்பட்ட விதைகள் வேண்டாம்...உனக்கு தேவையான காய்களை நீயே வளர்த்து சாப்பிடு,நாட்டு கோழிவளர்த்தா முட்டையும்சிக்கனும் கிடைக்கும... தண்ணிய கொதிக்க வச்சு செப்பு அண்டாவுல ஊத்தி குடி ,ஒரு நோயும் வராதுன்னு சொல்றாங்க....
💥அடப்பாவிகளா முப்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி தானடா நாங்கள் எல்லோரும் வாழ்ந்தோம்..!!!
💥#பட்டணத்துக்கு வா பவிஷா வாழலாம் ன்னு சொல்லி வர வச்சுட்டு , பொய்யான தகவல்களை சொல்லி இப்ப திருப்பி எங்க முன்னொர்கள் சொன்னது எல்லாம் சரி, அவங்க செஞ்சது எல்லாம் சரினு சொல்றீங்களேங்க?????
#வயலும்வரப்பும்...
Thursday, June 25, 2020
நீர்_மேலாண்மை
#நீர்_மேலாண்மை!
தமிழர் வாழ்வியலில் பின்னிப் பிணைந்த மிகப் பெரிய நீர் சமூகம் ஒன்று இருந்தது. இவர்கள்தான் நீர் மேலாண்மையை நிர்வகித்தவர்கள். நதியில் ஓடும் நீரை ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்த்து, அதை சேமித்து வைத்து, விளைநிலங்கள் வரை கொண்டு சேர்ப்பதுதான் இவர்களது வேலை!
பெருக்கெடுத்து ஓடும் நதியின் நீரை கால்வாய் வழியாக ஏரிகளுக்கு கொண்டுவந்து சேர்ப்பது சாதாரண காரியமில்லை!
அதற்கு நிறைய தொழில்நுட்பம் தேவை. அது இவர்களிடம் மண்டிக்கிடந்தது. ஆற்றில் நீர் குறைவாக போகும் போதும் அந்த நீரை ஏரிக்கு கொண்டு வருவது எப்படி? என்ற நுணுக்கம் கற்றிருந்தார்கள்!
ஆற்று நீரை முழுவதுமாக தடுத்து தமது ஏரியை மட்டும் நிரப்பிக் கொள்ளாமல் தமக்கு அடுத்ததடுத்து இருக்கும் நீர்நிலைகளுக்கு ஆற்றுநீரை எப்படி பங்கிட்டுக் கொடுக்க வேண்டும்? என்ற கணக்கெல்லாம் தெரிந்து வைத்திருந்தவர்கள் இவர்கள். இந்த நீர் சமூகத்தின் அந்த பிரிவினருக்கு நீராணிக்கர்கள் என பெயர்! ஆற்று நீரை நீர்நிலைகளுக்கு கொண்டுவந்து சேர்க்கும் பொறுப்பு இவர்களுடையது!
நீரைக் கொண்டு வந்து சேர்த்தால் கடமை முடிந்ததா? அந்த நீரை கட்டிவைத்து காக்க வேண்டுமல்லவா?
அவர்களுக்கு நீர்க்கட்டியார் என்று பெயர். இவர்கள்தான் அந்த ஏரிக்கான முழுப்பொறுப்பு கொண்டவர்கள்! ஏரியில் மீன்பிடிப்பது, பரிசல் இயக்குவது, நீர் குறைவாக உள்ள காலங்களில் ஏரி நிலத்தில் விவசாயம் செய்வது போன்ற ஏரிக்குள் நடக்கும் எந்தவொரு நிகழ்வுக்கும் நீர்க்கட்டியார் அனுமதி வேண்டும்!
ஒரு ஏரியின் உயிர் அதன் கரையில் தான் இருக்கிறது. அந்தக் கரை உடைப்பு எடுத்தால் அது தானும் அழிந்து, தன்னை நம்பி வாழ்ந்த மக்களையும் அழித்துவிடும்!
அதனால்தான் ஏரியின் கரை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது அப்படிப்பட்ட கரையை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும்!
அந்த வேலையைப் பார்ப்பவர்களுக்கு கரையார் என்று பெயர். இவர்கள்தான் ஏரிகரைக்கு முழுப்பொறுப்பு!
என்னதான் கரையை வலுப்படுத்தினாலும் எதிரிகளால் எப்போதும் ஏரிகளுக்கு ஆபத்து இருந்து கொண்டேதான் இருந்தது. ஒரு ஏரியை உடைத்தால் சுலபமாக ஒரு நாட்டின் பொருளாதரத்தை ஆட்டம் காண வைத்துவிட முடியும்.
ஏரிகளை உடைப்பது மிகப் பெரிய பாவம் என்று சங்ககால பாடல்கள் சொன்னாலும் இதை மதிக்காத ஒன்றிரண்டு மன்னர்கள் எல்லா காலத்திலும் இருந்திருக்கிறார்கள். நேர்மையான முறையில் போரிட்டு வெல்லமுடியாத எதிரிகள் இப்படி நீர்நிலைகளை அழித்தொழிப்பதும் உண்டு!
அந்த ஏரியை பாதுகாக்க நியமிக்கப்பட்டவர்களே குளத்துக்காப்பாளர்கள்!
இவர்கள் ஏரிக்குள் அத்துமீறி நுழைபவர்களையும் விரட்டியடித்தனர்.
ஒரு ஏரி என்பது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆடு மாடுகள் விழுந்து இறந்து போவதும், சில சமயம் மனிதர்கள் இறந்து போவதும் நடப்பதுண்டு!
அப்படி விழுந்து மாண்டவற்றை அப்புறப்படுத்த ஏரியில் தேவையின்றி வளரும் தாவரங்கள், பாசிகள் போன்றவற்றை அழித்து ஏரியை தூய்மைப் படுத்த ஏற்படுத்தப் பட்டவர்கள்தான் குளத்துப்பள்ளர்கள்’. இவர்கள்தான் ஏரியின் சுத்தத்துக்கு பொறுப்பு!
ஏரியில் இருந்து திறந்து விடும் நீரை வாய்க்கால் மூலம் வயல்களின் வாசல் வரை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நீர்வெட்டியார் அல்லது நீர்பாச்சி என்பவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது!
இவர்கள் தான் வயல்களுக்கான நீரை கண்காணிப்பவர்கள்!
பாசனத்திற்காகவும் வெள்ளத்தின் போதும் நீரை திறந்து விடுவதற்காக ஏரிக்கரைகளில் மதகு, மடை, குமிழி, தூம்பு போன்ற அமைப்புகள் இருந்தன!
இந்த மடைகளை திறந்து மூடுவதற்கு ஒரு பிரிவினர் இருந்தனர் அவர்களுக்கு மடையர்கள் என்று பெயர்!
ஏரிகளின் கரைதான் ஒரு ஏரியின் உயிர். அக்கரைகளை எப்போதும் வலுவாக அமைக்கவேண்டும் என்பதில் மிகக்கவனமாக இருந்தவர்கள் தமிழர்கள். அக்கரைகளை அமைப்பதிலும் தமிழர்கள் கை தேர்ந்தவர்களாக இருந்தார்கள்.
உலகம் முழுவதுமே ஏரிகளை அமைக்கும்போது முதலில் களிமண்ணால் ஆனா உட்புறச்சுவர் ஒன்றை அமைப்பார்கள்
இதுதான் ஏரி நீரை கசியவிடாமல் தடுக்கும்.
இந்த சுவரை அமைத்தப் பின் அதன்மீது மற்ற மண்ணை இரண்டு பக்கமும் சேர்த்து கரையை மேலும் வலுவாக்குவார்கள். களிமண் சுவர் இல்லாமல் எரிக்கரைகளை அமைக்க முடியாது என்பது மேலை நாட்டினரின் கணிப்பு!
ஆனால், தமிழர்கள் வடிவமைத்த ஏரிக்கரைகள் பலவற்றில் களிமண் பயன்படுத்தப்படவில்லை. அருகில் கிடைக்கும் மண்ணைக் கொண்டே ஏரிக்கரையை அமைத்திருக்கிறார்கள்.
மண்ணோடு மண்ணை இறுக்கும் பசைப் போன்ற ஒன்றை பயன்படுத்தி இந்த சுவர்களை அமைத்திருக்கிறார்கள். அதில் ஒரு சொட்டு நீர் கசிவதில்லை!
சமீபத்தில் வீராணம் ஏரியில் புதிதாக ஒரு மதகை அமைப்பதற்காக ஏரிக்கரையை கொஞ்சம் உடைக்க வேண்டியிருந்தது. இன்றைய நவீன இயந்திரங்களை கொண்டு கூட அந்தக் கரையை உடைக்க முடியவில்லை. பாறைப் போன்று கரை இறுகியிருந்தது!
களிமண் இல்லாமல் கரை அமைக்க எப்படி முடியும்? என்று அகலத் திறந்த கண்களை வெளிநாட்டினர் இன்னமும் மூடவில்லை!
இன்னுமொரு வியக்க வைக்கும் தொழில்நுட்பமும் நம்மிடம் இருந்தது. அது ஏரியின் தரைப் பகுதியில் சேரும் சகதியை வெளியேற்றுவது!
ஏரிக்கு வரும் நீர் வெறும் நீரை மட்டும் கொண்டு வருவதில்லை. கூடவே வண்டல் மண்ணையும் சேறு சகதியையும் சேர்த்தே கொண்டு வந்துவிடும்.
இவைகள் அதிகம் சேர்ந்தால் ஏரி தூர்ந்து போய்விடும். மதகுகள் அடைத்துக் கொள்ளும். அதனால் இவற்றை ஏரியில் சேரவிடக் கூடாது என்பதில் மிக கவனமாக இருந்தார்கள்!
இந்த வண்டல் மண்ணையும் சேறையும் ஏரியில் இருந்து வெளியேற்ற ஒரு தொழில்நுட்பத்தை வைத்திருந்தார்கள் நம்மவர்கள். அதற்குப் பெயர் குமிழி!
இதுவும் ஏரி நீரை வெளியேற்றும் ஒரு அமைப்புதான். இது ஏரியின் தரைத் தளத்தில் மதகுகளில் இருந்து 300 அடி தொலைவில் ஏரியின் உட்புறமாக அமைத்திருப்பார்கள்!
ஒரு மதகுக்கு ஒன்று என்ற அடிப்படையில் குமிழி இருக்கும்.
இந்த குமிழி பெரிய தொட்டிப் போன்ற அமைப்பில் இயங்கும். பெரிய நகரங்களில் சாலைகளைக் கடக்க நாம் பயன்படுத்தும் சுரங்கப்பாதை போல் இருக்கும். இதன் நுழைவு வாயில் ஏரிக்குள்ளும் வெளிவாயில் ஏரிக்கு வெளியே பாசனக் கால்வாயிலும் இருக்கும்!
ஏரியில் அதிகமான வண்டலும் சகதியும் சேரும்போது இந்த குமிழியை திறந்து விடுவார்கள்.
சேறோடித்துளை மூலம் தரையில் இருக்கும் வண்டல் மண்ணையும் சேற்றையும் இந்த முறையில் சுத்தமாக வெளியேற்ற முடியும். அது வெளியேறி ஏரிக்கு வெளியே உள்ள பாசனக் கால்வாயில் சேர்ந்து விடும்!
வண்டல் மண் பயிர்களுக்கு நல்ல உரம் என்பதால் இப்படி ஒரு ஏற்பாடு. இதனால் ஏரியின் தளத்தில் சகதி சேருவது வெளியேற்றப்பட்டது. இது தமிழர்கள் பயன்படுத்திய அற்புதமான தூர்வாரும் தொழிநுட்பம்!
ஆனால், பின்னாளில் ஆட்சிக்கு வந்த ஆங்கிலயர்கள் அதன் அருமை தெரியாமல் அவர்களது ஆட்சிகாலத்தில் குமிழி தேவையற்ற ஒன்று என்று நிறைய ஏரிகளில் இருந்து நீக்கிவிட்டார்கள்.
அதன்பின் ஏரியில் வண்டல் மண்ணும் சேறும் சேரத்தொடங்கின. மதகுகள் சகதியால் அடைத்துக் கொள்ளத் தொடங்கின!
ஏரிகளின் மரணத்திற்கு முதல் அச்சாரம் இது. இதோடு ஆங்கிலேயர்களின் நீர்நிலையை பாழ்படுத்தும் கடமை முடிந்துவிட வில்லை. இன்னும் நிறைய இருக்கிறது.
ஏரிகளின் கரையில் காலாற நடந்து போனால் மடத்து கருப்பன், மட இருளன், மட முனியன் என்ற காவல் தெய்வங்களை பார்க்கலாம்.
இந்த தெய்வங்களை எப்போதும் ஏரியின் மடைகளுக்கு அருகிலேயே அமைத்திருப்பார்கள். அந்த தெய்வங்களின் பூர்விகத்தைக் கேட்டால் அது அந்த ஏரிக்காக உயிர்விட்ட ஒருவரின் நடுகல்லாக இருக்கும். அதைப் பற்றி பின்னர் பார்ப்போம்!
விளைவிக்கப்பட்டிருக்கும் நிலங்களுக்கு ஏரியில் இருந்து எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்ற அளவை துல்லியமாக வைத்திருந்தார்கள் தமிழர்கள்!
அதற்கேற்ப மதகுகளை ஏரிகளில் அமைத்திருந்தனர். அவர்களின் நீர் மேலாண்மை வியக்கவைக்கிறது!
ஏரிகளை அவர்கள் ஏனோதானோவென்று உருவாக்கிவிடவில்லை. பாசனம் பெரும் விளைநிலங்களின் பரப்பளவு, மண்ணின் வகை, நிலத்தின் அமைப்பு, இருப்பிடம் இவற்றைக் கொண்டு ஏரியின் கொள்ளளவை நிர்ணயித்தார்கள். அதற்கு ஏற்ப மதகுகளை அமைப்பார்கள்!
இந்த மதகுகளில் இருந்து எவ்வளவு நீர் வெளிவரும், எல்லா மடைகளையும் திறந்தால் எவ்வளவு நீரை வெளியேற்ற முடியும் என்ற எல்லா நுட்பங்களையும் திட்டமிட்டுதான் ஒரு ஏரியை வடிவைப்பார்கள்!
இப்படி துல்லியமாக அமைக்கப்பட்ட ஏரியிலிருந்து மதகுகள் வழியாக நீரை வயல்களுக்கு அனுப்பும் வேலையை மடையர்கள் பிரிவினர் பார்த்து வந்தார்கள். ஒரு நாழிகை நேரம் மதகுகளை குறிப்பிட்ட அளவு திறந்து வைத்திருந்தால் நீர் இவ்வளவு ஆயக்கட்டுக்கு பாய்ந்திருக்கும் என கணக்கீடுகளை தெரிந்திருந்தார்கள்!
ஏரியிலிருந்து பாசனத்திற்காக வாய்க்கால்கள் மூலம் வயல்கள் வரை கொண்டு வந்து சேர்க்கும் வேலையை ‘நீர் பாச்சி’ என்பவர்கள் செய்து வந்தனர் என்பதை முன்னரே பார்த்திருந்தோம்!
இவர்களுக்கடுத்து ஒவ்வொரு வயல்களுக்கும் தேவையான நீரை பாய்ச்சுவதற்காக குமுழிப்பள்ளர்கள் இருந்தார்கள்!
இவர்கள் இப்படி பாயும் நீரை அளவிடுவதற்காக ‘முறைப் பானை’ என்ற ஒன்றை வைத்திருந்தார்கள்!
இந்த முறைப் பானையை செம்பு அல்லது தாமிரம் கொண்டு செய்திருப்பார்கள். இது 10 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவில் இருக்கும். இந்தப் பானையின் அடிப்பாகத்தில் ஒரு சிறு துளையிடுவார்கள்.
இப்படி துளையிடும் ஊசி எந்த அளவு இருக்க வேண்டும் என்பது கூட சங்க கால பாடல்களில் துல்லியமாக சொல்லப்பட்டிருக்கிறது.நீர் பாய்ச்ச இருக்கும் வயல்களுக்கு அருகே மூன்று கற்களைப் பரப்பி அதன் மீது இந்த பானையை வைத்து விடுவார்கள். பானை முழுவதும் நீர் நிரப்பிவிடுவார்கள்!
அதே நேரத்தில் அந்த வயலுக்கான நீரையும் வாய்க்காலில் இருந்து பாய்ச்சத் தொடங்குவார்கள். துளையிலிருந்து நீர் வழிந்து கொண்டே இருக்கும். பானை நீர் முழுவதும் வடிந்து விட்டால் ஒரு ஏக்கர் நெல் வயலுக்கும் நீர் பாய்ந்து விட்டதாக அர்த்தம். எப்படியொரு நுட்பம் பாருங்கள்…!
நீரைப்பகிர்ந்து எல்லா வயல்களுக்கும் சமமாக கொடுப்பதில் குமுழிப்பள்ளர்களை அடித்துக் கொள்ள முடியாது!
நீரை வெளியேற்றுவதில் மதகுகளுக்கும் மடைக்கும் வித்தியாசம் இருக்கிறது. மதகுகள் வழியாக நாம் நீரை வேண்டிய அளவு வெளியேற்ற முடியும். நீரைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் மடை என்பது அப்படியல்ல அதை திறந்துவிட்டால் முழு அளவில் நீர் பீறிட்டுக்கொண்டு வெளியேறும். அதைக் கட்டுப்படுத்த முடியாது!
அதனால் தான் மடை ஏரியின் உயிர்நாடி என்றார்கள். இந்த மடைகளை பராமரிப்பவர்களுக்கு மடையர்கள் என்று பெயர் இருந்தது!
மழைநீர் பெருக்கெடுத்து ஏரி முழுவதும் நீர் நிறைந்திருக்கும் போது கரைகள் உடையக்கூடிய அபாயம் இருப்பதால், ஏரி நீரை முழுவதுமாக வெளியேற்ற வேண்டிய நிலை வரும். மதகுகள் வழியாக ஆர்ப்பரிக்கும் அவ்வளவு நீரையும் வெளியேற்ற முடியாது. அப்போது மடையை திறந்து விடவேண்டும்.
மடையை திறப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. உயிரை பணையம் வைக்கும் செயல் அது.
இந்த இக்கட்டான நிலையில் தலைமைக் கிராமம் ஏரியின் நிலைமைப் பற்றி முடிவெடுக்கும்!
ஒரு ஏரி கிட்டத்தட்ட 50 கிராமங்களுக்கு மேல் நீர்பாசனத்தை வழங்கும்!
வெள்ளம் வரும் நேரங்களில் ஏரி உடையக்கூடிய வாய்ப்பிருப்பதால். முதலில் இந்த கிராமங்களில் தண்டோராமூலம் அபாய எச்சரிக்கை கொடுத்து மக்கள் அனைவரும் கிராமங்களை விட்டு வெளியேற்றிவிடுவார்கள்!
அப்போது ஒரேயொரு மனிதருக்கு மட்டும் மாலை மரியாதையோடு பிரிவு உபச்சாரம் நடைபெறும்.
அவர்தான் அந்த ஏரியின் மடை பராமரிப்பாளர். மடையன்என்று அழைக்கப்படுபவர்!
தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒரு ராணுவ வீரனின் தியாகத்துக்கு சற்றும் குறைந்ததல்ல இவர் செய்யும் தியாகமும்!
மனைவியும் பிள்ளைகளும் திலகமிட்டு வழியனுப்புவார்கள். அது இறுதிப் பயணம் போன்றதுதான்!
ஒரு ஈ, காக்காய் கூட இல்லாத அந்த வெற்று ஊரில் இந்த ஒரு மனிதர் மட்டும் தன்னந்தனியாக ஏரியை நோக்கிப் போவார்!
ஏரியில் தழும்பி நிற்கும் நீரைப் பார்க்கும்போதே மூச்சு முட்டும். அப்படிப்பட்ட அந்த ஏரிக்குள் மூழ்கி அடி ஆழத்தில் இருக்கும் மடையை திறப்பது சாதாரண காரியமல்ல!
ஏரியின் பிரமாண்டம் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்!
பூண்டி ஏரியின் உயரம் 35 அடி, சென்னையை அன்று திணறடித்த செம்பரம்பாக்கம் ஏரி 24 அடி உயரம்.
இவ்வளவு உயரம் கொண்ட ஏரியின் அடி ஆழத்திற்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் ஆளாக செல்வது எத்தனை சிரமம்!
எவ்வளவு மூச்சை தம் கட்ட வேண்டும். அதோடு சென்று மடையை திறக்கும்போது நீரின் அழுத்தத்திலிருந்து மீண்டு வருவது மறுஜென்மம் எடுப்பது போல்!
மடையை திறக்கும்போதே ஆக்ரோஷத்தோடு வெளியேறும் நீர் மடை திறப்பவரை கொன்று விடுவதும் உண்டு!
இப்படி மடையை திறக்கப் போனவர்களில் உயிரோடு பிழைத்து வந்தவர்களும் உண்டு. உயிரை தியாகம் செய்தவர்களும் உண்டு.
உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு கிராமத்தின் சார்பாக நிலம் கொடுக்கப்படும். அவருக்காக நடுகல் நட்டு வைப்பார்கள்!
50, 60 கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காத்ததால் அவர் அந்த கிராம மக்களின் காவல் தெய்வமாக மாறுவார்!
மடையர் என்றும் மகத்தானவர்களே. அவர்களை அப்படி அழைத்ததே தவறு!
“ஏரிகள் – குளங்கள் குடி மராமத்து”
ஒரு ஏரி எப்படி அமைய வேண்டும். ஏரியை வடிவமைக்கும் போது ஒரு மன்னன் என்னென்ன அம்சங்களை பார்க்க வேண்டும் என்ற விவரங்களை எல்லாம் சங்க கால பாடல்கள் ஏராளமாய் சொல்கின்றன!எட்டாம் நாள் பிறை வடிவில் ஏரியை அமைத்தால் ஏரியின் கரை நீளம் குறைவாக அமைக்கலாம்!
அதே வேளையில் இந்த வடிவமைப்பில் நீரின் கொள்ளளவும் அதிகம் என்று கூறுகிறார் கபிலர். எத்தகைய ஞானம் அன்றைய புலவர்களுக்கு இருந்திருக்கிறது!
ஒரு அரசன் ஏரியை அமைக்கும் போது அதில் ஐந்து விதமான அம்சங்கள் இருக்கும்படி அமைக்க வேண்டும்!
அப்படி ஒரு நீர் நிலையை அரசன் உருவாக்கினால் அவனுக்கு சொர்க்கத்தில் ஓர் இடம் காத்திருக்கும் என்கின்றன பாடல்களும், கல்வெட்டும்!
அந்த ஐந்து அம்சங்களை பொதுவாக நமது எல்லா ஏரிகளிலும் குளங்களிலும் பார்க்க முடியும். அப்படிதான் அதனை அமைத்திருக்கிறார்கள்!
சொர்க்கத்தில் ஓர் இடம் பிடிப்பதில் அன்றைய மன்னர்கள் ஆர்வமாக இருந்திருக்கிறார்கள்!
‘குளம் வெட்டுதல்’ என்பது முதல் அம்சம். அதில் ‘கலிங்கு அமைத்தல்’ 2வது அம்சம், எரிக்கான நீரை கொண்டு வரும் ‘வரத்துக்கால்’, மதகுகளின் அமைப்பு, அதிகமான நீரை வெளியேற்றும் ‘வாய்க்கால்’ அமைப்பு போன்ற அனைத்தும் 3வது அம்சம். ‘ஆயக்கட்டு’ பகுதிகளை உருவாக்குதல் 4வது அம்சம். ஊருக்கான ‘பொதுக்கிணறு’ அமைத்தல் 5வது அம்சம்.
பழமையான கிராமங்களில் இந்த எல்லா அம்சங்களுமே இருக்கும். இதில் பொதுக்கிணறு எதற்கென்றால் எப்படிப்பட்ட ஏரிகளும் கடுமையான வறட்சி காலத்தில் வற்றிப் போய்விடும்!
ஏரியில் குறைவாக இருக்கும் நீரை மதகுகள் வழியாக வயல்களுக்கு பாய்ச்சினால் நிறைய நீர் இழப்பு ஏற்படும். அத்தகைய காலங்களில் கிணற்றில் இருந்து நீர் எடுத்து பயன்படுத்துவது புத்திசாலித்தனம். அதைதான் அவர்களும் செய்தார்கள்!
மேலும் கால்நடைகளுக்கும் சலவை தொழில் செய்பவர்களுக்கும் வருடம் முழுவதும் அதிக நீர் வேண்டும்!
இதற்காகவே ஏரியின் மையப்பகுதியில் ஆழமாக எப்போதும் தண்ணீர் இருப்பது போன்ற அமைப்பையும் உருவாக்கியிருந்தார்கள்!
சலவைத் தொழிலாளிகள் எப்போதும் அவர்கள் பணி நிமித்தமாக எரிகளிலேயே தொடர்ந்து இருப்பதால் ஏரியை காவல் காக்கும் பொறுப்பை அவர்களிடமே ஒப்படைத்திருந்தனர்!
நீர் சமூகத்தில் எந்தெந்த பிரிவுக்கு என்னென்ன வேலை பகிர்ந்து கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதை அவர்கள் செய்தே ஆக வேண்டும்!
அதில் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை இருந்தது.
அதானால் நீர் மேலாண்மையும் நீர் பகிர்தலும் எந்தவித தொய்வும் இல்லாமல் வெகு சிறப்பாக நடந்தது!
சரி, பயிர்களுக்கு, கால்நடைகளுக்கு, ஏன் சலவைக்குக் கூட நீர் கொடுத்தாகிவிட்டது!
அப்படியென்றால் ஊர்களில் கிராமங்களில் பெரிய நகரங்களில் வாழும் மக்களுக்கு நீர்..?
விட்டுவிடுவார்களா..!?
வாடிய பயிர்களை கண்டபோதெல்லாம் வாடிய மாந்தர்கள் அல்லவா அவர்கள் மனிதர்களை வாட விட்டுவிடுவார்களா..?!
பிரமாண்டமான கோட்டைகள், அரண்மனைகள் கட்டும் போது கூடவே மழைநீரை சேமித்து வைக்கும் அகழியையும் அமைத்தார்கள்!
இதை எதிரிகளிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் அரணாகவும் மாற்றிக் கொண்டார்கள்!
இதைப்போலவே பெரிய கோயில்களை கட்டும்போது அதில் விழும் மழைநீரை கோயிலுக்கான தெப்பக்குளங்களில் சேரும் விதமாக அமைத்தார்கள்!
இதுபோக குடிநீருக்கென்று குளங்கள், மற்ற நீர் தேவைகளுக்கு தனிக் குளங்கள் என்று ஊருக்குள்ளும் நிறைய நீர் சேமிப்பு மையங்களை அமைத்தார்கள்!
இதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக் கொண்டார்கள்.
கோடையில் இந்தக் குளங்களும் சில சமயங்களில் வற்றிப் போகும். வருடம் முழுவதும் நிலத்தடி நீர் நல்ல நிலையில் சேமிக்கப்படுவதால் சில நாட்களுக்கு மட்டும் கிணற்று நீரை பயன்படுத்திக் கொள்வார்கள்!
இந்த குளங்களை எல்லாம் பராமரிக்கும் பொறுப்பு மக்களிடமே விடப்பட்டது. இதற்கு குடிமராமத்து எனப் பெயர். அதாவது குடிமக்கள் தாங்களாகவே குளங்களை பாதுகாத்து பரமாரித்துக்கொள்ளும் முறை.
வாரத்தில் ஒருநாள் வீட்டுக்கொருவர் என்ற கணக்கில் ஊர் மக்கள் ஒன்றுசேர்ந்து குளங்களை சுத்தப்படுத்துவார்கள்!
இதனால் குளங்கள் தூய்மையாகவும் உயிர்ப்போடும் இருந்தன…!
இப்படி ஊர் மக்களையும் உணவளிக்கும் விவசாயத்தையும் நீர் மேலாண்மையால் கட்டிப்போட்ட தமிழர்கள் எப்படி தமிழ்நாட்டை வறட்சி காடாக மாற்றினார்கள்..?
பிரமிக்கவைக்கும் சங்கிலித் தொடர் ஏரிகள்!
“கடைசி ஏரிதான் முதலில் நிறையும். முதல் ஏரி கடைசியாக நிறையும்.”
அப்படியொரு தொழில்நுட்பத்தில் அமைந்ததுதான் சங்கிலித் தொடர் ஏரிகள்.
ஒரு மொழியின் செழுமை என்பது அதன் சொற்களில் இருக்கிறது. தமிழ் சொற்களுக்கு பஞ்சம் இல்லாத ஒரு மொழி!
மனிதன் உருவாக்கிய நீர்நிலை கட்டுமானங்களுக்கு அவன் ஏகப்பட்ட பெயர் வைத்திருக்கிறான்!
இலஞ்சி, கயம், கேணி, கோட்டகம், ஏரி, மலங்கன், மடு, ஓடை, வாவி, சலந்தரம், வட்டம், தடாகம், நளினி, பொய்கை, குட்டம், கிடங்கு, குளம், கண்மாய்…
அப்பாடி..! சொல்லிமுடிக்கவே மூச்சு முட்டுகிறது…!
இத்தனை பெயர்களையும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து அந்தந்த நீர்நிலைகளுக்கு வைத்திருந்தார்கள்!
இயற்கையான நீர் ஊற்றுகள் உள்ள இடங்களில் அமைந்த நீர்நிலைகளுக்கு பொய்கை, ஊற்று என்று பெயர்.
தானாகவே நீர் கசிந்து சிறிய அளவில் தோன்றும் நீர் நிலைகளுக்கு சுனை, கயம் என்று பெயர்!
ஊற்றுகள் எதுவும் இல்லாமல் மழைநீர் மட்டும் தேங்கி இருக்கும் சிறு நீர் தேக்கத்திற்கு குட்டை என்று பெயர்!
இன்றைக்கு இந்த சொல் சாக்கடை நீர் தேங்கும் இடத்தை குறிப்பதாக மாறிவிட்டது!
மக்கள் குளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளுக்கு குளம் என்று பெயர்!
அழுக்கு போகக்குளிப்பது இன்றைய வழக்கம். ஆனால் அன்றைய குளித்தலின் அர்த்தம் வேறு!
பகல் முழுதும் வயலில்வெயிலில் வேலைசெய்து வெப்பமான உடலை குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நடைமுறையே குளிர்த்தல்.
இதுவே காலப்போக்கில் குளி(ர்)த்தல் என்று மாறியது.
Tuesday, June 2, 2020
Saturday, May 23, 2020
Saturday, May 16, 2020
எமதர்மன் வரலாறு
#எமதர்மராஜன்
எமதர்மன் வரலாறு
உலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீரவேண்டும் என்பது வாழ்க்கை நியதி.
ஆண்டாண்டுதோறும் அழுது புரண்டாலும் மாண்டார் திரும்பி வரமாட்டார் என்பதும் அனைவருக்கும் தெரிந்ததுதான்.
மரணம் எனும் நிகழ்வைக் கட்டுப்படுத்துகிற தேவன் எமன். அவனுக்கு எமதருமன் என்றும் #தர்மராஜன் என்றும் பெயருண்டு. காலம் தவறாமல் உயிர்களைக் கவர்வதால் அவனுக்குக் காலன் என்ற பெயரும் உண்டு.
அஷ்டதிக் பாலகர்களில் தென்திசைக் காவலன் எமன். இவன் மகாவிஷ்ணுவின் பாரம்பரியத்தில் தோன்றியவன். மகாவிஷ்ணுவிடமிருந்து தோன்றியவர் பிரம்மதேவன். அவரிடமிருந்து தோன்றியவர்கள் மரிசி, காஸ்யபர், சூரியதேவன் ஆகியோர். சூரியனிடமிருந்து தோன்றியவன் எமதருமன்.
அவனுக்கு சூரியபுத்திரன் என்ற பெயரும் உண்டு.விஸ்வகர்மா எனும் தேவலோகச் சிற்பியின் மகள் (சஞ்ஞாதேவி) சம்ப்ஜனா. இவளை சூரியதேவன் மணந்தார். அவர்களுக்கு மனு, எமன் என இரண்டு புத்திரர்களும், எமி என்ற மகளும் தோன்றினர். சூரியனின் கடும் வெப்பத்தைத் தாங்கமுடியாத சம்ப்ஜனா, தனது நிழலான சாயாவை சூரியனிடம் விட்டுவிட்டு, தவம்புரிய வெகுதூரம் சென்றுவிட்டாள். சாயாவையே சம்ப்ஜனா என எண்ணிக் கொண்டிருந்த சூரியதேவனுக்கு அவள் மூலம் மூன்று குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் சனி, மனு, தப்தி ஆகியோர். எமனும் சனியும் சூரிய புத்திரர்கள். எனவே, சகோதரர்கள்.
எமன் இயற்கையிலேயே நியாயஸ்தன். நீதி, நேர்மை தவறாதவன். சத்தியத்தின் பிரதிநிதி. சம்ப்ஜனாவின் நிழல்தான் சாயா என்ற உருவத்தில் சூரியனின் பத்தினியாக வாழ்ந்துகொண்டிருந்ததை அறிந்த எமன், சாயாவைக் குற்றம் சாட்டினான். அவள் சூரியனை ஏமாற்றுவதாகக் குறை கூறி, கோபத்தில் காலால் உதைத்தான். இதனால் கோபமடைந்த சாயா, எமனுக்குக் கால்களில் ஆறாத புண் ஏற்பட்டுத் துன்பப்படுமாறு சாபம் அளித்துவிடுகிறாள்.
பின்னர் சூரியனின் ஆணைப்படி எமன் சிவனைக் குறித்துக் கடும் தவம் இயற்றினான். சிவபெருமான் தோன்றி, அவனைத் தென் திசைக்குக் காவலனாக்கி, மனித உயிர்களின் ஆயுள் முடியும்போது, அவற்றைக் கவர்ந்து பாவங்களுக்கேற்ப தண்டனை அளிக்கவும், புண்ணிய பலன்கள் அளித்து வாழ வழி செய்வதற்கும் அதிகாரத்தை வழங்கி, அவனை நரகலோகம் எனும் எமலோகத்துக்கு அதிபதியாக்கினார்.
இரண்டு கூரிய சிகரங்களிடையே அதலபாதாளத்தில் அக்னி ஆறு. சிகரங்களை இணைத்துக் கட்டப்பட்ட ஒரு தலைமுடியில் ஒரு சிம்மாசனம் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்க, அதில் அமர்ந்துதான் எமதருமன் நீதி வழங்குகிறான்.
அவனது நீதியின் தன்மை எள்ளளவு மாறினாலும் அந்த சிம்மாசனம் அறுந்து, அதனுடன் எமனும் அக்னி ஆற்றில் விழுந்துவிடுவான். இத்தகைய சூழ்நிலையில்தான் எமன் நியாயம் வழங்கிக் கொண்டிருக்கிறான்.
சிவபெருமான், தனது வாகனத்துக்குச் சமமான ஒரு வாகனத்தை எமனுக்குத் தர விரும்பினார்.
ரிஷபத்தைப் போலவே தோற்றமுடைய, கரிய எருமைமாடு ஒன்றை உருவாக்கி, எமனுக்கு வாகனமாக அருளினார்.
விஷ்ணுவின் அம்சமான எமனுக்கு ஜீவன்களின் பாபபுண்ணியங்களை அனுசரித்து நீதி வழங்கும் அதிகாரத்தையும் அளித்தார்.
இந்தப் பணியைத் தவறின்றிச் செய்ய எமனுக்கு பல தடவை அக்னிப் பரீட்சை நிகழ்ந்தது. அவற்றிலெல்லாம் தவறாமல் தனது கடமையைச் செய்தவன் எமதருமன்.
ஆனால், ஸ்ரீராம அவதார முடிவில் எமனுக்கு ஒரு பெரும் சோதனை ஏற்பட்டது. ராவண சம்ஹாரத்துக்குப் பிறகு ஸ்ரீராமன் அயோத்தி திரும்பி முடி சூட்டிக்கொண்டான். இருந்தாலும் யாரோ ஒருவன் சொன்ன அபவாதத்துக்காகச் சீதையைக் காட்டுக்கு அனுப்ப நேர்ந்தது. வால்மீகி மகரிஷியின் ஆசிரமத்தில் ராமனின் புதல்வர்கள் லவ- குசர்கள் தோன்றினர். ஸ்ரீராமன் அனுப்பிய அஸ்வமேத யாகக் குதிரையை லவ- குசர்கள் தடுத்து, அதனால் ராமனே தன் புதல்வர்களை எதிர்த்துப் போரிடும் நிலைமை உருவாயிற்று.
பின்னர், லவ-குசர்கள் யாரென்று அறிந்து மனமகிழ்ந்தார் ஸ்ரீராமன். அவர்களுக்கு முறைப்படி பட்டம் சூட்டப்பட்டது. ஸ்ரீராமன், தனது அவதாரத்தின் கடமைகளை முடித்து மீண்டும் வைகுண்டம் செல்ல வேண்டிய தருணமும் வந்தது. இந்தப் பணி நிறைவேற எமனுடைய கடமை முக்கியமாக இருந்தது.
மகாவிஷ்ணுவின் சக்தியை ஸ்ரீராமனின் ஸ்தூல சரீரத்தில் இருந்து எடுத்து, மீண்டும் வைகுண்டம் சேர்க்க வேண்டியது எமனின் கடமையானது. அப்போது, எமதருமன் பிரம்ம தேவனை வேண்டினான். பிரம்மன் தோன்றி, இதற்கான வழிமுறையை அவனுக்கு எடுத்துரைத்தார்.
அதன்படி எமதருமன் அதிபலா மகரிஷியின் சீடன் போல் வடிவெடுத்து, அயோத்திக்கு வந்தான். அங்கே ஸ்ரீராமனைச் சந்தித்தவன், தான் ராமனுடன் தனியாக சில தேவ ரகசியங்கள் பற்றி பேசவிருப்பதால், யாரும் தங்கள் அறைக்குள் வரக்கூடாது என்று நிபந்தனை விதித்தான் அவனது விருப்பப்படியே ஸ்ரீராமனும் தன் சகோதரனான லட்சுமணனை அழைத்து, அறைக்கு வெளியே காவலுக்கு நிறுத்தினார். தாங்கள் பேசி முடிக்கும் வரையிலும் எவராக இருந்தாலும் உள்ளே விடக்கூடாது என உத்தரவிட்டார்.
எமனும் ஸ்ரீராமனும் அறைக்குள் பேசிக்கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். ஸ்ரீராமனைப் பார்க்க வேண்டும் என வலியுறுத்தினார். லட்சுமணன் அனுமதிக்க வில்லை. ஆனால், துர்வாசர் அவனை அலட்சியம் செய்யாமல், கோபத்துடன் ராமன் இருந்த அறைக்குள் சென்றுவிட்டார். (வேறு விதமாகவும் சொல்வதுண்டு.) இதனால், தன் கடமையைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று கலங்கினான் லட்சுமணன்.
சரயு நதிக்கரைக்கு ஓடோடிச் சென்று, ஸ்ரீராம் ஸ்ரீராம் என்று ஜபித்தபடியே ஆற்றுக்குள் இறங்கி பிராணத் தியாகம் செய்தான். தகவல் அறிந்த ஸ்ரீராமன், யார் தடுத்தும் கேளாமல் லட்சுமணனைத் தேடி சரயு நதியில் குதித்து, அதன் வெள்ளத்தில் மூழ்கினார். ராமாவதாரம் முடிந்தது.
எமதருமன் தனது கடமையை முடித்துக் கொண்டு ராம- லட்சுமணர்களின் ஆத்மாக்கள் வைகுண்டத்தை அடையவழி செய்தான்.நசிகேதஸ் என்பவன் எமதரும ராஜனை சந்தித்து, அவனோடு பேசி தனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டதாக உபநிடதம் கூறுகிறது.
அதுபோலவே, ஸ்ரீராமனும் எமனுடன் உரையாடி, பிறப்பு- இறப்பு, ஆத்ம விடுதலை பற்றிய பல தத்துவங்களைத் தெரிந்துகொண்டார். அடுத்ததாக விஷ்ணுவின் கிருஷ்ண அவதாரத்தில் வேதங்கள், உபநிடதங்கள், சாஸ்திரங்கள் ஆகிய அனைத்து தத்துவங்களையும் அனைவருக்கும் கண்ணன் உபதேசமாக வழங்குவதற்கு, ராமாவதாரத்தில் எமதரும ராஜனோடு உரையாடிய சம்பவமும் உதவியிருக்கலாம்.
அவதார புருஷர்களுக்கே உபதேசம் செய்யும் அளவுக்கு ஞானம் பெற்றவன் எமதருமன். இதற்கான வரலாறும் ஒன்று உண்டு.
பதினாறு வயது நிரம்பிய மார்க்கண்டேயனின் உயிரைக்கவர எமதருமன் சென்றபோது, மார்க்கண்டேயன் சிவலிங்கத்தைக் கட்டிக் கொள்கிறான். மார்க்கண்டேயன் மீது எமன் வீசிய பாசக்கயிறு சிவபெருமான் மீதும் விழுந்தது. சிவன் கோபத்துடன் எமனைத் தண்டித்து தடுத்தத்துடன், மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு வயது என்று அருள்புரிந்தார்.
அந்த தருணத்தில் சிவபெருமான் கோபத்தில் காலனை காலால் உதைத்தார் என்ற வரலாறு உண்டு. இதற்கும் ஒரு உட்பொருள் இருந்தது.. நீதியும் நேர்மையும் தவறாமல் சத்தியத்தைக் காக்கும் பொறுப்பேற்ற எமதருமன், அதற்கான மனோபலம் பெறுவதற்காக, ஆதிபராசக்தியைக் குறித்து கடும்தவம் செய்தான். அம்பிகை தோன்றி அருள்புரிந்து அளப்பரிய ஞானத்தை நல்கினாள். ஆதிசக்தியின் திருவடிகள் தன் மார்பின் மீது பட வேண்டும் என்று விரும்பினான் எமன். காலம் வரும்போது அது கைகூடும் எனக்கூறி மறைந்தாள் ஆதிசக்தி. மார்க்கண்டேயனைக் காப்பாற்றியபோது சிவபெருமான், தன் இடது காலால் காலனை உதைத்தார். அர்த்தநாரீஸ்வரரான சிவபெருமானின் இடது கால், அன்னை ஆதிபராசக்தியின் காலல்லவா? ஆக, எமன் வேண்டிக்கொண்டபடியே அன்னையின் திருப்பாதங்கள் அவன் மார்பில் பட்டது. ஞானம் வேண்டி எமன் செய்த தவம் பூர்த்தியானது.
பல்வேறு யுகங்களில் எமனும் சில அவதாரங்கள் எடுத்து அருள்புரிந்ததாக புராண வரலாறுகள் உண்டு. மகாபாரத காலத்தில் எமதருமனின் அம்சத்தில் தோன்றியவர்தான் விதுரர். அவர் கூறிய நீதிகளும் வழிகாட்டிய சன்மார்க்க வழிகளும் விதுரநீதி என்ற நூலாக நமக்குக் கிடைத்துள்ளது.
பாண்டவர்களில் மூத்தவரான தருமமும் குந்திதேவிக்கு எமதருமனின் அனுக்ரஹத்தால் பிறந்தவர். எந்த நிலையிலும் தருமம் தவறாது அரசு புரிந்த யுதிஷ்டிரர், எமதருமனின் அம்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் என்றதுமே மரணம் என்று பலர் சிந்திக்கின்றனர். பாசக் கயிற்றைப் போட்டு உயிரை எடுத்து நரகத்தில் தள்ளும் கொடிய தேவதையாக நினைத்து பயப்படுகின்றனர்.
ஆசையிலும் பேராசையிலும் மூழ்கி பொன், பொருள், புகழ் ஆகியவற்றை நம்பியே வாழ்பவர்கள் மரணத்துக்கு பயப்படுவார்கள். மரணமில்லாப் பெருவாழ்வு பெறுவதற்கு தவம் செய்பவர்கள், மரணத்துக்கு பயப்படுவதில்லை.
எமன் எனும் தர்மராஜனை அவர்கள் தரிசிக்க விரும்புகிறார்கள்.
சத்தியத்தைக் கடைப்பிடித்து நீதியும் நேர்மையும் தவறாமல் வாழ்பவர்களுக்கு மரண பயம் இருக்காது!
#Sundarji
#Arunagiri
Thursday, April 16, 2020
இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்
#யாழி... #உலகையே_மிரண்டு_போக_வைத்த #தமிழனின்_புராதன_கால_விலங்கு..!!
~``~``~`` 🥀🍂 🥀🍂 ``~``~``~
இன்று வரை எந்த ஆய்வாளர்களாலும் கண்டுபிடிக்க முடியாத மர்மம்..!!
நம்மில் எத்தனைப் பேருக்கு யாழி(யாளி) என்றால் என்னவென்று தெரியும்.?
யாழிகள் தென்னிந்தியாவில் உள்ள கோவில் சிற்பங்களில் மட்டுமே காணக் கிடைக்கும் ஒரு விசித்திரமான மிருகம். கோயில் கோபுரங்கள், மண்டப தூண்களில் மட்டுமே காணப்படும் ஒரு கற்பனைச் #சிலை என்பது தான் பலரது எண்ணமும்.
அதன் தோற்றம் சிங்க முகமும் அதனுடன் யானையின் துதிக்கையும் சேர்ந்தார் போல் காட்சி தருவதைப் போன்று பல கோவில்களில் இவற்றின் சிலைகள் அமைக்கபெற்றுள்ளது.
சிங்கத்தின் தலை கொண்டதை “#சிம்ம #யாழி” என்றும்,
ஆட்டுத்தலை கொண்டதை “#மகர #யாழி” என்றும்,
யானை முகத்தை “#யானை #யாழி” என்றும் அழைக்கிறார்கள்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இதே பூமியில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் ராட்சத உடல் அமைப்புடன் “டைனோசர்” என்ற மிருகங்கள் வாழ்ந்தது என்று கூறிய போது முதலில் நம்ப மறுத்த உலகம், பின்னர் அது குறித்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடத்தி அவற்றின் #எலும்புகள், #முட்டைகள், உருவ அமைப்பு போன்றவற்றை ஆதாரத்துடன் வெளியிட்ட பின்பு தான் நம்பத் தொடங்கினார்கள்.
பின்னர், இது குறித்த திரைப்படங்களை இயக்கியதும் இந்த மிருகங்கள் குறித்த தகவல் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சென்றடைந்தது. அப்படியானால் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்று பின்னணி கொண்ட இந்திய துணைக்கண்டத்தின் தென்பகுதியில் இப்படி ஒரு பிரமாண்ட விலங்கின் பதிவுகள் ஏராளமாக பரவிக்கிடப்பதை பார்க்க முடிகிறது.
சில கோவில்களில் இந்த மிருகத்தை குதிரையை போன்று கடிவாளமிட்டு அடக்கி அதன் மீது வீரர்கள் கையில் வாளுடன் அமர்ந்திருக்கிறார்கள். அப்படியானால் இவை போருக்கு பயன்படுதப்பட்டிருக்குமா?
இவற்றை எல்லாம் விட்டு ஒரு படி மேலே சென்று பார்த்தோமேயானால், இந்த யாழிகளுக்கென்று தமிழர்கள் தனியாகவே ஒரு வரிசையை #கோவில் கோபுரத்தில் ஒதுக்கி இருக்கிறார்கள். அதை “யாழி வரிசை” என்றே அழைக்கிறோம்.
ராஜ ராஜன் கட்டிய பிரம்மாண்டமான தஞ்சை பெரிய கோயிலில் கூட இந்த யாழிக்கென்று ஒரு முழு தனி வரிசையே ஒதுக்கப்பட்டுள்ளது. உருட்டும் கண்களோடும், கோரப்பற்களோடும் ஒரு விலங்கின் முகத்தை கோபுரத்தின் நான்கு திசையிலும் பார்க்க முடிகிறது.
மேலும், தஞ்சை பெரியகோவில், மதுரை மினாட்சிஅம்மன் கோவில் போன்ற தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் எல்லாம் இரண்டு கால்களில் நிற்கும் முழு உயர முப்பரிமான யாழியின் சிலையும், அந்த யாழி சிலையின் முழங்காலுக்கு கீழே யானை நிற்கும் சிலையையும் வடித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட யாழி சிலை தென் இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் லட்சத்திற்கும் மேல் சிலைகள் உள்ளன. உலகில் எந்த விலங்குகளுக்கும் இந்த எண்ணிக்கையில் முழு உருவ, முப்பரிமான சிலைகள் கிடையாது என்பது உலகம் அறிய தவறிய உண்மை.
குறிப்பாக தமிழர்கள் அறிய தவறிய உண்மை. நம்மில் பலர் கோவில்களுக்கு சென்றிருந்தாலும், இந்த யாழி சிலைகளை முழு மனதோடு இதுவரை கவனித்து இருக்க மாட்டோம். அது தான் யாழி என்ற அதிசய விலங்குக்கு இதுவரை நடக்கும் அவலநிலை.
யாழிக்கு எத்தனை கோவில்களில், எத்தனை விதமான சிலைகள் உள்ளன? யாழியில் எத்தனை வகைகள் உள்ளன? பண்டைய காலத்தில் வாழ்ந்த சிற்பக்கலை நிபுணர்கள் காணாத ஒரு உருவத்தை சிலையாக வடித்திருப்பார்களா? யாழி உருவம் எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?
நமது சிறிய கோவில்களிலும் யாழியின் உருவம் உள்ளதை நாம் அறிவோமா? யாழியைப் பற்றி புராணங்கள் என்ன சொல்கின்றன? யாழி என்ற உயிரினம் கற்பனையா? இல்லை அறிவியல் பூர்வமாக அது ஒரு உயிரினமா? யாழி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகமா? வாழாத ஒரு உயிரினத்தை ஆயிரக்கணக்கில் சிற்பங்களாக வடிக்க காரணம் என்ன?
குடிக்கு அடிமையாகிக் கிடக்கும் தமிழ் சமூகத்தில் இவற்றை குறித்து யார் ஆராய்ச்சி செய்யப்போகிறார்? பதவிக்கு அடித்துக்கொள்ளும் தமிழக அரசியலில் இவற்றின் ஆராய்ச்சிகளுக்கு நிதி ஒதுக்கப்படுமா அல்லது கடைசி வரை அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சாகவே இவை மண்ணோடு மண்ணாகிவிடுமா?
இதுபோன்ற கேள்விகள் அனைத்திற்குமே யாரிடமும் பதில் இல்லை !!!!
யாழிகள் ஒருவேளை கற்பனை விலங்காகவே இருந்தாலும் கூட சீனர்களின் புராதன விலங்கு டிராகன் போல, எகிப்தியரின் புராதன பறவை ஃபீனிக்ஸ் போல, தமிழரின் புராதன விலங்கு யாழி.
அவை போற்றப்பட வேண்டும்.
மேலும் நம் அருகில் இருந்தும் நாம் இந்த யாழிகளை கண்டுகொள்வதில்லை.
ஆனால், இங்கு வரும் வெளிநாட்டினரோ இதன் உருவ அமைப்பையும் அது வடிவமைக்கப்பட்டிருக்கும் தோற்றத்தையும் கண்டு மிரண்டுதான் போகிறார்கள்.
Tuesday, April 14, 2020
கடவுள் என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஒளி என்று பெயர்
வாசி..! #வாசி..! வாசி..!
கடவுள் என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஒளி என்று பெயர். பஞ்ச பூத சக்திகளின் கூட்டிணைவால் அவ்வொளி நம் உடலுக்குள் பிரகாசிக்கின்றது. பஞ்ச பூதத்தில் காற்றே மிக உன்னதமானது. இதனைக் கொண்டே #சித்தர்கள் சாகா நிலையை அடைந்தனர். அக்காற்றைப் பிடிக்கும் கலையைப் புண்ணிய ஆத்மாக்களுக்குப் பயன்படும் விதம் தம் செய்யுளில் பரிபாசையாகச் சொல்லி வைத்துள்ளனர். ஸ்ரீகாகபுசுண்டர் தொடங்கி வள்ளலார் வரையிலும் வாசியைப் பாடாத சித்தர்கள் இல்லை எனலாம் அதுபற்றி இனி!.
வாசி என்றால் என்ன?
பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்று மூக்கின் வழியே உள்சென்று சக்தியைக்கொடுக்கிறது. வாசி என்பது மூலாதாரத்தில் இருந்து தலையின் உச்சி வரை உள்முகமாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு உயிர்க்காற்று. இது மூக்கின் வழி வாரா.
சித்தர்கள் தங்கள் உடலைக் காயகல்ப உடலாக மாற்றிக் கொள்வதற்கும் இறப்பில்லாமல் வாழ்வதற்கும் எங்கும் பறந்து செல்வதற்கும் அக்காற்றையே அவர்கள் இலயமாக்கிப் பயன்படுத்திக் கொண்டனர்.
நம் உடலில் உள்ள தசவாயுக்கள் :
(1)#பிராணன்
(2)₹அபாணன்
(3)#வியாணன்
(4)#உதானன்
(5)#சமானன்
(6)#நாகன்
(7)#கூர்மன்
(8)#கிருகரன்
(9)#தேவதத்தன்
(10)#தனஞ்செயன் என்பனவாகும்.
இதில் தனஞ்செயன் என்ற வாயு மட்டும் குழந்தையை உந்தித்தள்ளி #பிறக்க வைத்துப் பின்பு அது மூலாதாரத்தில் ஒடுங்கியே கிடக்கும். இது #மனிதன் #இறந்த பின்பு அவ்வுடலை வீங்கவைத்துச் சிதைத்துத் தலைவழியே வெளியேறும். உயிருள்ள போதே அக்காற்றைக் கிளப்பி அதனைப் பயன்படுத்திக் கொள்வதே வாசி எனும் யோகம் ஆகும்.
"உருத்தரித்த நாடியில்
ஒடுங்குகின்ற வாயுவைக்
கருத்தினால் இருத்தியே
கபாலம் ஏற்ற வல்லீரேல்
விருத்தரும் பாலராவர்
மேனியும் சிவந்திடும்
அருள்தாத்த நாதா பாதம்
அம்மைபாதம் உண்மையே"
- சிவவாக்கியர்; பா:126
இங்கே "உரு" தரிப்பதற்குத் தனஞ்செயன் என்ற வாயுவே காரணம்; இதுவே #பிறப்புறுப்புக்குக் கீழே மூலாதாரத்தில் ஒடுங்கிக் கிடக்கும் அதனைக் கபாலத்தில் நம் சாதனைகள் மூலம் ஏற்றினால் என்றும் இளமையுடன் வாழலாம் என்கிறார் சிவவாக்கியர்.
மேலும் மூலாதாரத்தில் அக்கினியாய் #ஒளிர்ந்து கொண்டிருக்கும் குண்டலினி சக்தியை மேலே கிளப்பி அதனையே #தியானித்து வந்தால் எல்லா சித்திகளும் பெறலாம் என்பதை
"பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடா"
- திருமந்திரம்,3ஆம் தந்திரம்
என்கிறார் என் குருநாதர் திருமூலர்.
வாசியை முறையாக இலகுவான பயிலும் வழிமுறை தான் என்ன? அதையும் அவர்களே கூறுகிறார்கள்...
வாசி என்பது சித்தர்கள் மட்டுமே செய்து வந்த அற்புதக் கலை. அதனைச் சாகாக்கலை, வேகாக்கால் என்று அழுகணிச் சித்தர் குறிப்பிட்டுள்ளார். இந்தக் #கலையைத் தீயவர்கள் பயன்படுத்தா வண்ணம் பரிபாசையாகத் தம்நூலில் சொல்லிவைத்தனர். அதனை நானும் வெளிப்படையாகச் இங்கு பகிர விரும்பவில்லை. ஆகவே சில விளக்கங்களை மட்டுமே கூறியுள்ளேன்.
காகபுசுண்டர்இயற்றிய பெருநூல் காவியம் 1000 என்ற #நூலில் வாசியை அழகாக எடுத்து இயம்பியுள்ளார். உணவில் விருப்பம் கொண்டு உண்டு திரிபவனுக்கு வாசி என்பது எட்டாக்கலையாகும். யோக சாதனையில் இருக்கும் யோகிக்கு உணவு கட்டுப்பாடு அவசியமானதாகும்.
"தெள்ளாத மாந்தருக்குத் தவிடுமில்லை
"தீனி குறையாதவர்க்கு வாசியில்லை"
- காகபுசுண்டர்; பா:72;அ-3
ஆகையால் உணவில் ஒரு கட்டுப்பாடும் திடமான உள்ளமும் கொண்டு விடாமுயற்சியுடன் செய்யும் ஒரு பயிற்சி முறைதான் வாசி யோகம்,
"வாசிப் பழக்கம் அறியவே ணுமற்று
மண்டல வீடுகள் கட்டவேணும்"
- கொங்கண சித்தர் பா:28;அ-1
என்று வாசியின் அவசியத்தைக் கொங்கண சித்தர் வலியுறுத்துகிறார். வாசி ஒன்றே மனிதனை நோயிலிருந்து காக்கும். அதுவே என்றும் இளமை தரும் மாமருந்து. வாசியை இலயமாக்கும் மந்திரத்தைத் தெள்ளத்தெளிவாக
"ஆகீகூவென்றே யுரைத்த
அட்சரத்தில் ஆனந்தம்
யோகியோகி என்பார்
கோடி உற்றறிந்து கண்டிடார்"
சிவவாக்கியர்; பா:450;அ-1-2
என்று சிவவாக்கியர் சுட்டிக்காட்டுகிறார்.
அஇ உஇ இ என்ற மூன்று எழுத்தே மந்திரம் ஆகும். இம்மந்திரத்தைச் சொல்லி வாசி என்னும் குதிரையை ஓட்டிப் பழக வேண்டும். அஇ உ இதுவே சித்தர்கள் சொன்ன எட்டு இரண்டு #மந்திரம் #தமிழ் எண்முறையில் இதனை அறிந்து கொள்ளலாம். அகரமும் உகரமும் உடலில் சூரிய சக்தியாகவும் சந்திர சக்தியாகவும் செயல்படுகின்றன. இம் மந்திரத்தைப் பயன்படுத்தியே தனஞ்செயன் என்ற வாயுவைக் கிளப்ப வேண்டும்.
"எட்டிரண்டு மொன்றுமது வாலை என்பார்
இதுதானே பாதிமதி சுழுமுனை என்பார்"
- கருவூறார்பா:24;அ-1
அங்ஙனம் கிளம்பும் வாயுவானது மேலே பாம்பைப் போல் சீறிப்பாய்ந்து உண்ணாக்கைத் தாக்கும். அங்கிருந்தே அது கபாலம் ஏறி ஒளியுடன் சேர்ந்து நடம்புரியும். இதனையே புறவுலகில் அனைவரும் அறியும்வண்ணம் அரச மரத்தடியில் பாம்புச்சிலையை வடித்து வைத்தனர். (ஓசோன் என்கிற சுத்தக் காற்றை அரசமரமே தரவல்லது).
"கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
" உண்ணாக்கு மேலேறி உண்புதுமை மெத்த உண்டு"
- அழுகணி சித்தர் பா:20;அ-1-2
உண்ணாக்கு வழியே மேல் ஏறும் காற்றே வாசி இப்பொழுது மூக்கின் வழியே சுவாசம் இருக்காது. ஆனால் வாசி மட்டும் இயங்கிக்கொண்டே இருக்கும். நாசி செய்யாதனவற்றை எல்லாம் வாசி ஒன்று மட்டுமே செய்து விடும். அக்காற்றே உடல் முழுதும் பரவி பரவச நிலையை அடைய வைக்கும் அந்நிலை அடைந்தவரைச் சுற்றியே மென்காந்த அலை பாயும். அதுதான் ஆன்ம சக்தி சித்தர்களின் ஜீவ சமாதியில் நாம் போகும் போது அந்நிலையை நாம் உணர முடியும். இத்தகைய வாசி நமக்குள்ளே அடங்கும் விதத்தைச் சிவவாக்கியர்,
"நாடி நாடி நம்முள்ளே நயந்து காண வல்லீரேல்
ஓடி ஓடி மீளுவான் உம்முளே அடங்கிடும்
தேடிவந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடிகோடி காலமும் குறைவிலாது இருப்பீரே"
- சிவவாக்கியர்; பா:275 என்கிறார்.
வாசி இலயமாகி நமக்குள் ஒடுங்கி விட்டால் எம பயமின்றி கோடி கோடி காலம் எந்தக்குறையும் இல்லாது வாழ முடியும்.
வாசியைத் தடுக்கும் எமன் யார் தெரியுமா?
போகர் தம்முடைய போகர்; 7000 என்ற நூலில் வாசியைக் குறிப்பிடும் பொழுது
"ஆட்டியே அண்ணாக்கில் கபத்தைத்தள்ளி
அடுத்தாறு தளத்திலுள்ள ஆமம் நீக்கு
வாட்டியே ஐம்புலனை வாளால் வீசு
- போகர்; பா:28;அ-3-4
என்று வாசி வேலை செய்யும் முறையைக் குறிப்பிடுகிறர். அ உ என்ற இரண்டு மந்திரத்தால் வாயின் உள்ளே இருக்கும் அண்ணாக்கை ஆட்டினால் அங்கிருக்கும் கபநீர் எல்லாம் வெளியேறிவிடும். அதுதான் வாசி மேலே ஏறாவண்ணம் தடுத்துக்கொண்டிருக்கும். அந்தக் கப நீரை வெளியேற்றினால் வாசி கபாலம் ஏறி இலயமாகும். இந்தக் கப நீரையே கோழை என்றும் எமன் என்றும் சொல்லி வைத்தார்கள். இது அதிகமாகும் போது மனிதன் இறப்பை எய்துகிறான். ஆனால் வாசியோகம் இக்கோழையை எடுத்துவிடுவதால் மரணமிலாப் பெருவாழ்வு வாழலாம். +அகரத்தையும் உகரத்தையும் ஓதும் முறைகளைப் காகபுசுண்டரும் சிவவாக்கியருமே தம்நூலில் கூறி வெளிப்படுத்தினர்.
அம்மந்திரம் வேட்டைக்காரன் குணுகுணுத்த மந்திரம் என்று பரிபாசையாகச் சொல்லிவைத்தார். வேட்டைக்காரன் பேச்சு எப்படி அமையுமோ அப்படித்தான் இம்மந்திரத்தை உச்சரிக்கவேண்டும்.
போகர் இவ்வாசியை வைத்தே மலைமீது தாவினார்; என்று காகபுஜண்டர் தம்நூலில் சான்று பகிர்கிறார்.
பிராணாயாமமும் வாசியும் ஒன்றல்ல,
பிராணாயாமம் என்பதனையே பலரும் வாசியென்று நினைத்துக்கொண்டுள்ளனர். அது தவறான எண்ணம் மனிதர்கள் ஒரு நாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறார்கள்.
"போற்றியே சரமென்ற கணக்கின் போதம்
இருபத்தோ ராயிரத்து அறுநூ றோர்நாள்"
- கோரக்கர்; பா:34;அ-3
அதனைக் குறைத்துக்கொள்ளவும் காற்றிலுள்ள உயிர்ச்சக்தியின் மூலம் உள்ளுறுப்புகளைப் பலப்படுத்தி ஆயுளைத் தள்ளிப் போடவும் இந்தக்காற்றைப் பிடிக்கும் கலையைச் சித்தர்கள் போற்றி அருளினார்கள். இது வெறும் மூச்சுப்பயிற்சியே ஒழிய வாசி ஆகாது. இதனையும் கணக்கறிந்தே பழகவேண்டும் அவ்வாறு இல்லையேல் உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
வாசி என்பது உடலை வருத்திச் செய்யும் ஒரு யோகம் ஆகும்.
வாசி ஒரு மிக சிறந்த தவமே...
வாசி இலயமானதும் நாம் தவநிலையில் அதனை ஓடவிடவேண்டும் ஏனெனில் வாசியை நம் கட்டுக்குள் வைக்க தவமே சிறந்த வழி
"சித்திரம் போலே யிருந்து வாசி பாரு"
- காகபுஜண்டர் பா:73;அ-3
என்கிறார்; புஜண்டர் அசைவற்ற நிலையில் இருந்து வாசியை மனதால் பார்க்கவேண்டும். நெஞ்சிலே இருத்தி நெருங்கி ஒடும் வாயுவை என்கிறார் சிவவாக்கியர்.
கோரக்கநாதர் சந்திர ரேகை என்னும் நூலில் ஒரு யோகி அசைவற்று நெஞ்சு நிமிர்ந்து ஆசனத்தில் அமந்து வாசியை நோக்கவேண்டும் என்கிறார்.
"வாசியென்றும் மவுனமென்றும் இரண்டும் வித்தை"
- கம்பளிச் சட்டைமுனி பா:13;அ-1
ஆகவே வாசியை மௌனம் என்ற வித்தையில் சேர்த்தால் தான் அது அட்டமாசித்திகளைப் பெற்றுத் தரும். வாசியை இலயமாக்கும் விதமும் அதனைத் தக்க வைத்துப் பயன்பெறும் விதமும் இதுவே ஆகும்.
"நாக்கு வாய் செவிமூக்கு மத்திக் கப்பால்
நடுவீதி குய்யமுதல் உச்சி தொட்டுத்
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டுத்
தாயாரைப் பூசித்து வேதம் ஓது
வாக்குவாய் அசையாமல் மவுனங் கொண்டு
வாசிவரு மிடத்தில் மனம் வைத்துக் காத்து
நீக்குவாய் வாசியொடு மனந்தான் புக்கு
நினைவதனி லடங்கிவரும்; வாலை காணே"
- வால்மீகி; பா:12
இது வால்மீகி; ஞானம் என்ற நூலில் ஸ்ரீவால்மீகி சித்தர் ; சொன்ன தவமுறையாகும். இம்முறையன்றி வேறு எவ்வழியிலும் வாசியைப் பெற முடியாது இதுவே சித்தர் வழி. வாசி எனும் உயிர்க்காற்றைப் பிடித்துச் சித்தர்பெருமக்கள் இறவாநிலை எய்தினார்கள்; ஆகவேதான் அனைவரும் ஒன்றுபோலவே இதனைத் தம்நூலில் பதிவுசெய்தனர்.
காயகல்பம் என்றால் என்ன?
காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது
பத்து நிமிட மணித்துளிகள் "ஓம்" என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க
வேண்டும். உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக
காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட வேண்டும்.
இப்படி சூரிய பகுதியில் உஷ்ணமாக உள்ள காற்றை சந்திரப்பகுதியில்
குளிர்ச்சிப்படுத்தி வெளியேற்றும் பொழுது "ஓம்" என்ற மந்திரத்தை மனதால் நினைந்தவாறு தொடர்ந்து செய்து வரவேண்டும். இங்ஙனம் வெளிச்செல்லும் பிராணன்
குறைந்து குறைந்து இறுதியில் உள்ளேயே சுழலத் தொடங்கும். உள் சுழற்சியால் மூலாதாரத்தில் பாம்பு வடிவில் உறங்கிக் கொண்டிருப்பதாக சொல்லப்படும் குண்டலினி என்னும் சக்தி எழுப்பும். குண்டலியும் அடியுண்ட நாகம் போல் ஓசையுடன் எழும். இவ்வாறு எழும்பும் குண்டலினி ஆறு தரங்களில் பொருந்தி சகஸ்ராரத்தில் சென்று அமுதமாக மாறிக் கீழ்வரும்.
சித்தர்கள் "விந்து விட்டவன் நெந்து கெடுவான்" என்பார்கள். காரணம் இந்த விந்துதான் பிரணாயத்தின் மூலம் குண்டலினி வழி சகஸ்ராரத்தில் அடைகிறது. மேல் ஏறினால் பேரின்பம். கீழ் இறங்கினால் சிற்றின்பம்.
யோகியர் நாவை மடித்து இதனை உண்ணுவார். இந்த ஒரு சொட்டு அமுதம் சுவைத்தால் பசி, தாகம், தூக்கம் இல்லாது பன்னிரண்டு ஆண்டுகள் தவமிருக்கலாம்.
அதுவே சிவநீர் என்பார்கள். இதனை விழுங்கினால் நாமும் காயசித்தி பலனை அடையலாம்.
இதனை திருமூலர்;
"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாள்ர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே"
- என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் எமனை எதிர்த்து உதைக்கும் ஆற்றல் அறிந்தவர்கள். வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் "தாம் பெற்ற இன்பம் இவ்வையகம்
பெறுக" என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை "காகபுசண்டர்" பாடலைக் காண்போம்;
"பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே"
ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் – சக்தியும்.
உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் – பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப – துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம
பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே , விளக்கவே அர்த்தநாரீஸ்வரர்
உருவமாக சரிபாதி உடல்.
Sunday, March 22, 2020
குங்குமம் அணிவதன் நன்மைகள்.
#குங்குமம் அணிவதன் #நன்மைகள்.
#சுமங்கலிப் பெண்கள் நெற்றியிலும் உச்சியிலும் வைத்துக் கொள்ளும் குங்குமத்தில் தான் #மகாலக்ஷ்மி மகிழ்ந்து இருப்பதாக #இந்து தர்மம் சொல்கிறது.
*நெற்றியில் குங்குமம் அணியும் போது, தீய சக்திகள் நெருங்காது.
*இரு புருவங்களுக்கிடையில் குங்குமம் வைத்தால், அவர்களை யாரும் அவ்வளவு எளிதில் வசியம் செய்ய முடியாது.
*மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு போன்ற கிருமி நாசினிப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்பட்ட குங்குமத்தை பெண்கள் தங்களுடைய நெற்றியின் மையப் பகுதியில் அணிவதால் உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகளின் வெப்பத்தை குங்குமம் தடுக்கிறது.
*குங்குமத்தின் மேல் சூரிய ஒளிப்படும்போது குங்குமத்தில் உள்ள மூலிகை தன்மையும், சூரிய சக்தியிலிலிருந்து வெளிப்படும் வைட்டமின் டி சக்தியும் உடலுக்குள் சென்று நன்மையை ஏற்படுத்துகிறது.
*வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
*குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.
*பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்புதான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
*அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.
*தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
*திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
*ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
*கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
*குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
*சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும்.
(இயற்கை முறையில் விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கபட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.)
Thursday, March 12, 2020
தேங்காயை உடைத்த பின்புதான் அதன் குடுமியை உரிப்பது எதற்காக..?
#தேங்காயை உடைத்த பின்புதான் அதன் குடுமியை உரிப்பது எதற்காக..?
#சில பழக்க வழக்கங்கள் ஏன் எதற்கு என்று தெரியாது ஆனால் கண்டிப்பாக கடைபிடித்துவருவோம்.
#இயற்கையோடு ஒத்து வாழ்ந்து அதனை மதித்து வாழ்வது நம் மக்களின் பெருமை.
#ஓர் அறிவு ஜீவன்களான #தாவரங்கள் கூட தன் இனப்பெருக்கத்தை உறுதி செய்ய சூழ்நிலையை உறுதி செய்து முளைவிட்டு செழிக்கும்படியான விதைகளை #உற்பத்தி செய்து பரப்புகிறது.
#ஒவ்வொரு #விதையும் முற்றியபின் தன் #தாயிடம் இருந்து முடிந்தவரை தள்ளிச் சென்று வேறூன்றி தழைத்துச் சந்ததியைப் பெருக்கத் தேவையான அனைத்து தகவமைப்புகளையும் கொண்டுள்ளது
#விதைகள் ரோமங்களில் ஒட்டிக்கொள்வது, வெடித்துச் சிதறுவது, #காற்றில் பரப்பது, பறவைகளுக்கு உணவாவது. தண்ணீரில் மிதந்து செல்வது என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை.
#அந்த விதத்தில் #தென்னை நீர்நிலையைச் சார்ந்த தாவரம் என்பதால் முற்றிய தேங்காய் #நீரில் மிதந்து வெகுதூரம் செல்லத்தக்கது. குறைந்தபட்சம் தென்னைமட்டை தூரமாவது தாய் #மரத்தை விட்டு விலகிச் சென்று விழும்படியான அமைப்பைக் கொண்டது.
#தென்னை நெற்று முளைவிட வேண்டும் என்றால் குறிப்பிட்ட அளவிலான ஈரப்பதம் அதன் கண் பகுதியில் தொடர்ந்து இருந்துவரவேண்டும். அதனை உறுதிப் படுத்தவே #நீர் உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளும்படியான நார் தென்னை நெற்றைச் சுற்றி உள்ளது. குறிப்பிட்ட காலம் ஈரப்பதம் இருந்தால்தான் அதன் காம்புப் பகுதி கழன்று நீர் உட்புகுந்து ஈரப்பதம் காக்கப்பட்டு கண் திறந்து முளைவிடும்.
#ஒவ்வொரு விதையும் ஒரு உயிரைத் தன்னகத்தே கொண்டுள்ளது. அதனைப் போற்றும் விதமாக, நாம் பயன்படுத்தும் தேங்காயினை தேங்காய் உடைக்கும் வரை அதன் கண்களை மூடியிருக்கும் குடுமியை உரிக்காமல் வைத்து உடைத்த பின்பே உரிக்கிறோம்.
#கடைசி நேரத்தில் கூட அதன் முளைக்கும் தன்மையை நாம் பறிப்பதில்லை. உடைக்காதவரை எப்போது வேண்டுமென்றாலும் மீண்டும் விதைத்து மரமாக்கலாம்..
Tuesday, March 10, 2020
ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது "
ஓராண்டு #கோயிலுக்குச் செல்லலாகாது "
தவறான வழக்கம் சந்ததிகளைத் துன்பத்தில் ஆழ்த்தி விடும் ...!
எவரேனும் இறந்துவிட்டால் அக்குடும்பத்தினர் ஒரு ...வருடத்திற்குக் கோலம் போட கூடாது , மலைத் தலத்திற்கும் போகக் கூடாது , #பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்ற தவறான வழக்கங்கள் தற்போது நிலவி வருகின்றது . #இறப்பு நேரிட்ட நாளிலேயே கூட அக்குடும்பத்தினர் கோயிலுக்குச் சென்று வழிபடுவதிலும் ,#வீட்டில் கோலம் இடுவதிலும் எவ்விதத் தவறும் #இல்லை , சாஸ்திர முரண்பாடும் கிடையாது . இடைச் செருகலாக வந்த இத்தவறான வழக்கமே பல குடும்பத்தவர்கள
ை ஒரு வருட காலம் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதோடு ,அக்குடும்பத்தி
னருக்கு எவ்வித ஆலய வழிபாட்டுப் பலாபலன்களையும் வரவிடாது ஓராண்டிற்குத் தடுப்பதால் அக்குடும்பத்தின
ரின் பல துன்பங்களுக்கு நிவர்த்தி கிட்டாமல் போவதுடன் ஆன்மீகத் தற்காப்பு சக்தியும் குறைந்து பலத்த பிரச்சனைகளும் தோன்றி சந்ததிகளை அலைக்கழித்துவிட
ும் ! இந்த ஒரு வருடத்திலும் பண்டிகைகள் கொண்டாடுவதிலும் எவ்விதத் தவறும் இல்லை . பண்டிகைகளினால் வரும் புண்ய சக்தி சேகரிப்பையும் இழத்தலும் தவிர்க்கப்படும் .
****அவ்வாறு துக்கத்தை ஒரு வருடகாலம் அனுஷ்ஷப்பதனால் டீ.வி , #சினிமா , #செய்தித்தாள் #படித்தல் , #புது ஆடைகள் , #ஸ்வீட்டுகள் , #காபி , டீ , ருசிகர #உணவுகள் , கேளிக்கைகளை ஒரு வருட காலம் எவரேனும் ஒத்தி வைகிறார்களா ? இறைவனா ஓராண்டு தன்னைக் காணலாகாது என்று விதிப்பார் ??? இறைப் பகுத்தறிவுடன் சிந்தியுங்கள் ! துன்பங்கள் மலை மலையாய்ப் பெருகும் கலியுகத்தில் ,அதுவும் பல பூஜைகளும் , வேத சக்திகளும் வெகு வேகமாக மறைந்து வரும் கலியுகத்தில் , " ஓராண்டு கோயிலுக்குச் செல்லலாகாது " என்ற அறியாமையினால் தோன்றிய தவறான எண்ணத்தைக் கட்டாயம் சமுதாயத்தில் இருந்து அகற்றியே ஆக வேண்டும் .
#Sundarji
Thursday, March 5, 2020
பாவம் செய்யும்போது எப்படி மறைவாக செய்கிறீர்களோ
#பாவம் செய்யும்போது #எப்படி மறைவாக செய்கிறீர்களோ
அதேபோல மிகுந்த #புண்ணியமான #அன்ன தானத்தையும் எவ்வித தம்பட்டம் இல்லாமல் #அமைதியாக செய்ய வேண்டும். அப்படியானால்தான் அந்த தானத்திற்குரிய #பலன் வெகுவாக கிடைக்கும்.
சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
சோழர் காலத்தில் தமிழ் நாடுதான்
#உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
![]() |
| Ourdreams |
#பணக்கார நாடு.எம் பாரத நாடு 🎑
சோழர் காலத்தில் தமிழ் நாடுதான் #உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.
#சுமார்40,000 #கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் #தஞ்சை பெரிய கோவிலும், #கங்கை கொண்ட சோழபுரம்தான்.
அப்போது வட #அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 ல் நிறுவப்பட்டது.
#தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் #தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் #மாலிக்கபூரின் #முஸ்லிம் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, #500யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.
இவ்வளவு #கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?
எல்லாம் #கடல் வாணிபம் ஏற்றுமதிதான்.
ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் #சோழநாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.
உலகிலேயே ஒரே சீராக #80இலட்சம் ஏக்கர் விளை நிலம் #காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் #மூன்று போகச் சாகுபடிக்குக் #காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.
#வியாபாரத்திலும், #ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன் படுத்தினர்.
#மலேயா காடுகளிலிருந்தும், #மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.
அசுவசாஸ்திரம் என்ற குதிரைப் பராமரிப்பு நூல் எழுதப்பட்டது. முதன் முதலில் #குதிரைகளுக்கு #லாடம் அடிக்கும் முறையைக் கண்டு பிடித்தவர்கள் #தமிழர்களே!
#ஏழுமலையானும் சோழர்களும் என்ற நூலில் இருந்து...#இந்து தர்மமும்..இந்து கோவில்களும்..
#ஏன் #கோவிலை #கட்டினார்கள்?
#ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???
கோயில் #பிராமணர்களுக்கு மட்டும் தட்டு காசு கிடைக்க வழி செய்யும் வியாபார ஸ்தலமா ???
#பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ???
கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ???? 🎑
#மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ???? 💗
உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???
எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் #செலவு, #மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.
இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.
மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.
கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.
கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.
நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.
சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.
நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.
மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.
தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.
அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.
கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.
இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.
இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.
பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.
12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.
இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.
ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,
அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.
மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிரைவு வாழ்க்கை.
இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.
கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.
தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,
எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.
உயிருள்ள ஒருவர்,எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.
அனைத்து சமூகமும் ஒரே முகமாக ஹிந்து என்ற ஒரு குடையின் கீழ், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை நமக்கு அளித்ததே ஹிந்து தர்மமும், ஹிந்து கோயில்கள் மட்டும்தான்.
இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.
#Arunagiri
#Suryatrust
#Ourdreams
Subscribe to:
Posts (Atom)




